செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர் கருங்குழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் பலரும் சென்னைக்கு செல்வதற்கு, முக்கிய பொது போக்குவரத்து ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் செல்லும் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, முறையாக ரயில்கள் இயக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. தினமும் நாள்தோறும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சேவை மதுராந்தகம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை எக்மோர் செல்லக்கூடிய விரைவு ரயில், காலை 7:30 மணி அளவில் மதுராந்தகம் வரும். அந்த ரயிலில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்வது வழக்கம்.  இந்த ரயிலும் கூட்டமாக வருவதால், தொடர்ந்து கூடுதல் பெட்டி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

 

இந்தநிலையில், நேற்று திங்கட்கிழமை என்பதால் வழக்கத்தை விட ரயிலில் கூட்டம் அதிகமாக வந்துள்ளது. அப்பொழுது அந்த ரயில் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் வந்தடைந்த பொழுது, ரயிலில் ஏறுவதற்கு இடம் இல்லாமல் பொதுமக்கள் தவித்துள்ளனர். எனவே கூட்டம் இல்லாமல் இருக்கும் ரிசர்வேஷன் பெட்டிகளை, திறந்து விட கூறி கோரிக்கை வைத்துள்ளனர். அதைச் செய்ய முடியாது என ரயில்வே நிர்வாகம் மறுக்கவே, ரயில் செல்வதற்கான சிக்னலை போட விடாமல் தடுத்தும், டிக்கெட் கொடுக்க விடாமல் தடுத்தும் 1 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், ரயில்வே போலீசார் மற்றும் மதுராந்தகம் ரயில் நிர்வாகத்தினர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர் . இதனை அடுத்து பயணிகள் சற்று ஆசுவாசமடைந்து மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. பயணிகள் கோபமடைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு மணி நேரம் ரயில் தண்டவாளத்தில் நின்ற சம்பவம் மதுராந்தக ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.




 



இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது :  ஏற்கனவே பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ,  இரண்டு ரிசர்வ் பெட்டிகள்,  இரண்டு மகளிர் பெட்டிகள், மீதமுள்ள பெட்டிகள் பொது ஆக இருந்து வந்தது . 12 பெட்டிகள் இருந்த நிலையில் தற்போது பரிசல் பெட்டிகளாக குறைக்கப்பட்டு இருப்பதால்,  ஏற்கனவே கூட்ட நெரிசலில் இருந்து வந்த ரயில் மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.  அதே போன்று இவ்வழியாக செல்லும் அனைத்து தென் மாவட்ட ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை.  குறைந்த பட்சம்  செங்கல்பட்டு வரை இயக்கப்படும் சென்னை கடற்கரை ரயில்களை மேல்மருவத்தூர் வரை இயக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்தனர்.