சென்னையில் பின்னணி குரல் பெண் கலைஞர் உள்ளிட்ட பல பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகி, காதலித்து மோசடி செய்த விக்ரம் வேதகிரி என்பவர் மீது பெண் கலைஞர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்ததை அடுத்து போலீஸ் அவரை கைது செய்துள்ளனர்.


காவல் ஆணையரிடம் புகார்


சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலன் தன்னைப்போல் பல பெண்களை காதலித்து ஏமாற்றி உடலுறவு கொண்டதாகவும், தனது இச்சைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி பல வழிகளில் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை வரும் 16 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாகவும், அத்திருமணத்தை தடுத்து அந்த நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் இளம் பெண் குறிப்பிட்டுள்ளார்.



முகநூல் மூலம் பழக்கம்


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனக்கு திருமணமாகி 2016 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. எனது காதலன் பெயர் விக்ரம் வேதகிரி, அவர் சென்னை திருநின்றவூரில் வசித்து வருகிறார். எனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமான அவர் தனது வேலை சார்ந்த விஷயங்களைப் பேசத் தொடங்கி, தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆனது உட்பட தன் சொந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டார். பின் 2021 ஆம் ஆண்டு நேரில் சந்திக்கத் தொடங்கியதும் விக்ரம் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார்", என்று கூறினார்.


ரகசிய திருமணம்


அவரது காதலை முதலில் மறுத்த இவர் நாளடைவில் அவரின் நடவடிக்கைகளை ரசிக்கத் தொடங்கி காதலை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், தன்னை அவரின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவைத்து, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ரகசியமாக திருமணமும் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி தனது வீட்டில் வந்து தங்கியதாகவும், ஊரறிய விரைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


பாலியல் துன்புறுத்தல்


திருமண ஆசைகாட்டி நிச்சயதார்த்தம் வரை முடிந்த பின்னரும், திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி தன்னுடன் உடலுறவில் மட்டுமே நாட்டம் காட்டி வந்த அவர், நாளடைவில் தனது பாலியல் இச்சைகளை தன் மீது திணித்து பல வழிகளில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மறுத்தால் தாக்கியதாகவும் தெரிவித்தார். அதைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தான் காவல்துறையை நாடியபோது விக்ரம் தன்னை மன்னித்து விடுமாறு கூறி தன்னை புகார் அளிக்கவிடாமல் தடுத்துவிட்டார் என்கிறார். ஆனால் தொடர்ந்து விக்ரம் தன்னை அவரது பாலியல் இச்சைகளுக்கு இணங்க வைத்ததை பொறுக்க முடியாமல் தட்டிக்கேட்டபோது, தன்னிடம் சொல்லாமல் தலைமறைவாகி விட்டதாகவும், விக்ரமின் உடைந்த செல்போன் ஒன்றை தனது வீட்டில் விட்டுச்சென்றதாகவும், அதை சரிசெய்து உள்ளிருந்த ஆபாசப் புகைப்படங்களையும், பல பெண்களுடன் தொடர்பில் இருந்து அதை வீடியோ எடுத்து வைத்திருப்பதையும் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.



ஆபாச கதாசிரியர்


மேலும், சொந்த உறவுகளைப் பற்றி அருவருக்கத்தக்க ஆபாசக் கதைகள், மீம்கள் என விக்ரம் தனது செல்போனில் அவரே தயார் செய்து எழுதி வைத்துள்ளதை தான் கண்ட பின்னரே அவரது சுயரூபமும், தன்னைப்போல் பல பெண்களை காதல் வலையில் விழவைத்து விக்ரம் ஏமாற்றியுள்ளார் என்பதும் தனக்கு தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


வழக்குப் பதிவு


குடும்ப சூழலில் சுணக்கம் ஏற்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து விக்ரம் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்புகொண்டு ஆபாச சாட்கள் செய்துள்ளதும் தெரியவந்ததாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் நாளை மறுநாள் வேறொரு பெண்ணுடன் விக்ரமுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காவல்துறை காப்பாற்ற வேண்டும் என கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தநிலையில் திருநின்றவூர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து விக்ரம் வேதகிரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.