Chennai Metro :  பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13ஆம் தேதி மட்டும் 2,66,494 பேர் மெட்ரோவில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் சேவைகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் சேவை நேரங்கள் மாற்றப்பட்டது. கூடுதல் நேரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பொங்கல் பண்டியை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மெட்ரோ ரயிலில் 8.36 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது” 

”இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இதுநாள் வரை இல்லாத அளவு (13.01.2023) அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,66,464 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 21,731 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14.649 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 13.607 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 12,909 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1 13.01.2023 2,66,494 பேர் பயணம்
2 14.01.2023 1,62,525 பேர் பயணம்
3 15.01.2023 1,08,160 பேர் பயணம்
4 16.01.2023 1,34,167 பேர் பயணம்
5 17.01.2023 1,65,399 பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.