படையெடுக்கும் மக்கள்

 

தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டி கிடப்பதால், பிழைப்பிற்காக தென் மாவட்டத்திலிருந்து, ஏராளமான மக்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதேபோன்று வட மாவட்டத்தை சேர்ந்த பலரும் சென்னை புறநகர் பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் சமயங்களில் இவ்வாறு தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி செல்வது வழக்கம். 

 



கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

 

இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தை 1 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளதால் சென்னையில் 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக வேகமாக தயாராகி வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், முன்பதிவு செய்யப்படும் விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



அரசு விரைவு பேருந்து

 

அரசு பேருந்துகளில் செல்வதற்கு ஆன்லைனிலும், நேரிலும் முன்பதிவு செய்தவர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாம்பரம், பெருங்களத்துார், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொத்தேரி, படப்பை,  ஸ்ரீபெரும்புதுார், கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் வரை செல்லாமல்,  கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் குறித்த நேரத்திற்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு பயணியரை ஏற்றிச் செல்லும்.

 

திருச்சி, விழுப்புரம், கடலுார், திண்டுக்கல், மதுரை, தேனி ,பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, துாத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு அதிவிரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணியரை ஏற்றி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற பகுதியில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைய, கிளாம்பாக்கம் வழியே செல்லக்கூடிய மாநகர பேருந்துகள் ,கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

 

கழிப்பறை வசதி

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி கழிவறை மற்றும் மருத்துவ குழு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்பதிவு செய்யாதவர்களும், இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும், உதவி மேலாளர் அறையில் தொடர்பு கொண்டு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்தில் காலி இருக்கைகள் இருந்தால், அதை பதிவுசெய்து செல்லாலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.