உண்மைக்கு புறம்பான புகார்
சென்னை இராயப்பேட்டை சரகம் W23 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் , பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் W 23 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடை பெற்று வந்த நிலையில், விசாரணையில் புகார் தாரரின் கணவர் ME படித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாகவும் இதை புகார் தாரரின் மாமனார் கேட்டு சண்டை போடுவதால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதை காரணமாக வைத்துக் கொண்டு தன் கணவரின் பேச்சை கேட்டு தன் மாமனார் மீது உண்மைக்கு புறம்பாக புகார் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
கடுமையான நடவடிக்கை
விசாரணையில், புகார் தாரர் தனது மாமனார் மீது உண்மைக்கு புறம்பாக புகார் கொடுத்ததால் சட்டவிதிகளின் படி புகார்தாரர் மீது வழக்கு பதிவு செய்ய உரிய நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் , குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு உரிய தண்டனை, வழங்கும் உயரிய நோக்கிலும், அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1) இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிடிட் கார்டு பணம் செலுத்தும் கடையில் , ரூ.1.48 இலட்சம் பணம் மற்றும் லேப்டாப் திருடிய ஊழியர்
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகரில் வசித்து வரும் அப்துல் கரீம் ( வயது 24 ) என்பவர் சூளைமேடு, அண்ணல் காமராஜர் தெருவில் கிரெடிட் கார்டு பில் செலுத்தும் கடை நடத்தி வருவதாகவும், கடந்த 04.08.2025 அன்று இரவு கடையை பூட்டிவிட்டு , மறுநாள் (05.08.2025) காலை கடையை திறக்க வந்துபோது, கடையின் ஷட்டரில் பூட்டு இல்லாமல் இருந்தபோது , ஷட்டரை திறந்து கடையினுள் சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த லேப்டாப் மற்றும் கல்லாவில் வைத்திருந்த பணம் ரூ.1.5 இலட்சம் ஆகியவை திருடு போனதாகவும் , அப்துல் கரீம் F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து திருட்டில் ஈடுபட்ட எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 32 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார் தாரரின் பணம் ரூ.1.48 இலட்சம் மற்றும் 1 லேப்டாப் மீட்கப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட சரத்குமார் கடையில் வேலை செய்து வந்ததும் , சம்பவத்தன்று நள்ளிரவு தன் வசமிருந்த மற்றொரு சாவியின் மூலம் கடையின் பூட்டை திறந்து பணம் மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்று, ஒன்றும் தெரியாதது போல நாடமாடியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சரத்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.