தொடர் விடுமுறை

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை  மற்றும் விஜயதசமி ஆகிய  பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் விழா என்பதாலும்,  தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதாலும் பெரும்பாலானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி  விழாவின் 9 நாளான ஆயுத பூஜை நேற்றுமுன் தினம் மிக விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதேபோன்று நேற்று விஜயதசமி விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான விடுமுறை கடந்த சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக தமிழ்நாடு முழுவதும் இருந்தது.  இதனால் பணி நிமித்தமாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த வெளியூரை சேர்ந்த பொதுமக்கள்  தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க துவங்கினர்.

போக்குவரத்து நெரிசல்

சென்னையிலிருந்து சொந்த ஊரை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கியதால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் போக்குவரத்து நெரிசலால் சென்னை மற்றும் சென்னை புறநகர் சிக்கி தவித்தது. தமிழ்நாடு முழுவதும்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதேபோன்று வடமாநிலத்தவரும் சென்னையிலிருந்து வட மாநிலத்திற்கு படையெடுத்து இருந்தனர். இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக சென்னை வழிச்சோடி காணப்பட்டது. இன்றைய தினம் சென்னையில் உள்ள பல சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் கூட்டத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க துவங்கி வருகிறது

இந்தநிலையில் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் துவங்க உள்ளன.  இதனால் வெளியூர் சென்று இருந்த, பொதுமக்கள்  சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை படிப்படியாக போக்குவரத்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டத்தை இணைக்கக்கூடிய சாலையாக இருக்கக்கூடிய திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கரித்துள்ளது.

படிக்கப்படியாக அதிகரித்து

அதேபோன்று தென் மாவட்டத்திலிருந்து வருகின்ற பெரும்பாலான அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி  பேருந்துகளில் பொதுமக்கள் அதிகளவு பயணித்து வருகின்றனர். கார்களில் வருபவர்கள் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நள்ளிரவு முதல் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் காவல்துறையினரும் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  ஆனாலும் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் இன்று ஆபிஸ் செல்கிறவர்கள் சரியான நேரத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் போக போக போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையும் எழுந்துள்ளது. 

 மதுராந்தகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் கிளியாறு மேம்பாலத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால்  ஈச்சர் லாரியும் காரும்  உரசி கொண்ட விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால்  விபத்து காரணமாக சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து   செல்லும் நிலை உருவானது இதை நடத்தி தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் சாலையில் நடுவே இருந்த வாகனங்களை சாலையின் ஓரமாக அப்புறப்படுத்தி விட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிறு விபத்துகளும் நடைபெற்று வருவதால்  போக்குவரத்து நெரிசல் சில இடங்களில் அதிகரித்து காணப்படுகிறது.