காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை, வசந்தம் நகரில் பகுதி நேர நியாய விலை கடை நேற்று  முன்தினம்  திறக்கப்பட இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக கூறியதை தொடர்ந்து, பாஜகவினர் திமுகவை கண்டித்து  இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



 

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,  மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை ஆகியோர் நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினர். திறப்பு விழா மற்றும் குத்துவிளக்கு ஏற்றும் போது தமிழக முதல்வரை வாழ்த்தி திமுகவினர் அதிகளவில் தொடர்ந்து கோஷமிட்டனர்.

 





 அதன் பின் மாமன்ற உறுப்பினர், சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர் பின்னர் திமுகவில் இணைந்த அவர் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை,  பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி பாஜகவில் சமீபத்தில் சேர்ந்தார். மாமன்ற உறுப்பினர் கயல்விழி பாஜகவை சார்ந்தவர் என்பதால், பாரத் மாதா கி ஜே என கோஷமிட துவங்கியதும் போட்டிக்கு திமுகவினரும் கோஷங்களை எழுப்ப அப்பகுதி பெரும் பரபரப்பானது. 

 

 



 

சிறிது நிமிடம் திமுக, பாஜகவினர் கோஷங்கள் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மாவட்ட செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினர்  அமைதிப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து அழைத்து சென்றார். திமுக - பாஜக மாறி மாறி கோஷங்கள் இட்ட செயல் அனைவரையும் அதிருப்தியடைய செய்தது.