Paranthur airport: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக வாபஸ் - போராட்ட குழு அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்ட குழு தெரிவித்துள்ளது

Continues below advertisement

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ்  பெறுவதாக போராட்ட குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்வோம்.

Continues below advertisement

புது விமான நிலையம்

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4 ஆயீரத்து 800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 

இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும் , மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்கள் போராட்டம்:

ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏகனாபுரம் கிராம மக்கள் 80  நாட்களுக்கு மேலாக தொடர்ந்து, தினமும் மாலை நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில்  விவசாய வேலைகளை செய்து முடித்துவிட்டு, விமான நிலையம் வேண்டாம் என கூறி போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில் சட்டமன்ற அலுவலகத்தை நோக்கி வருகின்ற 17ஆம் தேதி பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடைபயண போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

பேச்சுவார்த்தை:

இதனைத் தொடர்ந்து இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் , எ.வ.வேலு ஆகியோர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் பொழுது, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, க.சரவணன்,ப.இரவிச்சந்திரன், து.கதிரேசன், செ.கருணாகரன், ச.கணபதி, சுப்பிரமணியன், வெ.முனுசாமி, லோ.இளங்கோஆகிய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கோரிக்கை:

ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 2400 மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. எங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் கம்பக்கால்வாய் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தக்கூடிய பகுதியில் உள்ளது. எங்கள் கிராமமே ஒரு சமத்துவபுரமாக உள்ளது. எங்கள் கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான வழியினை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

”பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதி”

தமிழ்நாடு முதலமைச்சர் , ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்காகத்தான் வாழ்வாதாரத்திற்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும், சந்தை மதிப்பிற்கு 3.5 மடங்கு இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள் என தெரிவித்ததோடு, கிராம மக்களின் கோரிக்கையை,  முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள், அக்.17 அன்று அவர்களுடைய கோரிக்கையினை வலியுறுத்தி, மேற்கொள்ள இருந்த நடைபயணத்தை கைவிடுவதாக உறுதியளித்தனர்.

”போராட்டம் தொடரும்”

தினமும் மாலை மற்றும் இரவு வேலைகளில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்ப போராட்டம் தொடருமா? என  போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இரவு நேர போராட்டம் ஆனது தொடரும் என தெரிவித்தனர். அரசு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டம் மட்டுமே வாபஸ் பெறப்பட்டதாக கூறினர்

Continues below advertisement
Sponsored Links by Taboola