பசுமை விமான நிலையம்


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம்,நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, மேல்படவூர், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் , வளத்தூர், ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.




தொடரும் கிராம மக்கள் போராட்டம்


இந்த நிலையில் இத்திட்டத்தினால் பாதிப்படையக்கூடிய 13 கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்கள் மாலை நேரங்களிலே தொடர் போராட்டங்களை ஈடுபட்டு இன்றோடு 433 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீர் நிலைகள் மற்றும் மண் பரிசோதனை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஐஐடி குழுவினர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.




சாலை மறியல்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் சாலையில் மறியல் போராட்டத்திலே சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸா இருக்கும் இடையே கடும் வாக்குவாதங்களானது ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக சாலை மறியலில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். கடும் வெயிலின் காரணமாக ஒரு சில மூதாட்டிகள் சாலையிலேயே படுத்து மறியலில் ஈடுபட்டனர்.


கைது செய்யப்பட்ட கிராம மக்கள்


இதனையெடுத்து ஏகனாபுரம் கிராம முக்கியஸ்தர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் அதனை ஏற்க மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் அப்பகுதியில் பதற்றம் நிலை ஏற்பட்டது. இதனையெடுத்து அவர்களிடம் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை நடத்தி போராட்டகாரர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்து தனியார் பேருந்துகள் மூலம் ஒரகடத்திலுள்ள தனியார் திருமணத்தில் அடைக்கப்பட்டனர்.




 


கடும் போராட்டத்திற்கிடையே போராட்டகாரர்களை கைது செய்த பின்னர் பலத்த போலீசார் பாதுகாப்புடன் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட ஐஐடி ஆய்வு குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.


ஐஐடி ஆய்வு குழுவினர்


இந்நிலையில் பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐஐடி ஆய்வு குழுவினர் அங்குள்ள நீர்நிலைகளை ஆய்வு மேற்கொண்டனர். ஐஐடி ஆய்வு குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மச்சேந்திரநாதன்,


மார்ச் மாதத்தில் இருந்து நீர் நிலைகள் பாதிக்காமல் விமான நிலையம் அமைப்பதற்கு குறித்து தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் பல்துறை, வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். களத்தில் இதுவரை ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம். மீதமுள்ள இடங்களை இன்று ஆய்வு மேற்கொண்டோம். மக்கள் நேரடியாக எங்களை சந்தித்து கருத்து கூறலாம், மாவட்ட நிர்வாகம் இது குறித்து அறிவிப்பை உங்களுக்கு அறிவிக்கும் இதுவரை ஒருவர் எங்களிடம் கருத்துரைகளை வழங்கியுள்ளார்.  பரந்தூர் விமான நிலையம் அமைய இருக்கும் இடங்களில் உள்ள நீர்நிலை குறித்த ஆய்வு அறிக்கை இன்னும் 2 அல்லது 3  வாரத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் தெரிவித்தார்.


போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது  வழக்கு பதிவு


ஐஐடி குழுவினர் ஆய்வுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 138 நபர்கள் மீது 143,341,188 ஆகிய பிரிவின் கீழ் சட்ட விரோதமாக கூட்டம் கூட்டியதற்காகவும் அரசு ஊழியர்களின் உத்தரவுகளுக்கு கீழ்படிவதற்கு மறுத்தல்  மற்றும் பொது வழியை தடை செய்வது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு


ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் காந்தி ஜெயந்தி ஒட்டி இன்று நடைபெற இருக்கிற கிராம சபை கூட்டத்தை இரண்டாவது முறையாக புறக்கணித்து வருகின்றனர். இதுவரை 6 கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இரண்டாவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர்.