டெங்கு காய்ச்சல் என்றால் என்ன
டெங்கு வைரஸ் தொற்று என்பது ஒரு மோசமான காய்ச்சலை கொண்ட நோயாகும். இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களால் பரவும் வைரஸால் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ;
1.திடீர் காய்ச்சல் அல்லது குளிர்
2. தலைவலி , குறிப்பாக தலையின் முன்புறம் அல்லது கண்களுக்குப் பின்னால் வலி.
3. தசை மற்றும் மூட்டு வலி
4. சோர்வு
5. வயிற்று வலி , குமட்டல் அல்லது வாந்தி
அறிகுறிகள் பொதுவாக கொசு கடித்த 4 முதல் 10 நாட்களுக்குப் பிறகு தோன்றும் அல்லது 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் குணமடைவார்கள். சில நேரங்களில் தொற்று மிகவும் தீவிரமாகவும், சில சமயங்களில் அது உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கும்.
வடகிழக்கு பருவ மழை - ஆலோசனை கூட்டம்
வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து , சேவை துறைகளுடன் ஆலோசனை கூட்டம் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மலேரியா - டைபாய்டு பாதிப்பு பரவல்
காய்ச்சல் பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக உள்ளது. அதே நேரம் , சென்னை , ராமநாதபுரம் , கன்னியாகுமரி , துாத்துக்குடி மாவட்டங்களில் , மலேரியா பாதிப்பு காணப்படுகிறது எனவும் , திருச்சி , தஞ்சாவூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் டைபாய்டு காய்ச்சல் அதிகம் காணப்படுகிறது.
சென்னை , திருச்சி , விழுப்புரம் , செங்கல்பட்டு , திருப்பத்துார் , ஈரோடு , தஞ்சாவூர் , கோவை , நாமக்கல் மாவட்டங்களில் , கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு , மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிவப்பு மண்டலம்
சென்னை, திருவள்ளூர், கோவை, கடலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்புகளில் , சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
தமிழகத்தில் இந்தாண்டில் 22 பேர் 'ரேபிஸ்' நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் எல்லாம் நாய்க் கடிக்கு பின், முறையான சிகிச்சை பெறாமல், அலட்சியமாக இருந்ததால் ஏற்பட்ட விளைவு. இகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு படுத்துவதுடன் , காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் , துணை சுகாதார இயக்குநர்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.
அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது ;
வடகிழக்கு பருவ மழையையை ஒட்டி 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மழைக் காலங்களில் , வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில் , கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. இதில், 'ஏடிஸ்' வகை கொசு உற்பத்தியை தடுப்பதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் , மூன்று வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டில் இதுவரை, 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு பேர் இறந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பாதிப்பு அதிகமாகி உயிரிழந்துள்ளனர் என இவ்வாறு அவர் கூறினார்.