செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34) இவர் மீது பீர்க்கன்காரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவி மற்றும் கோகுல் என்ற மகன், யுவஸ்ரீ என்ற மகள் உள்ளனர். நெடுங்குன்றம் சூர்யாவும், அவரின் மனைவி விஜயலட்சுமியும் பாஜகவில் இருக்கிறார்கள்.



 

இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டு,  வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்நிலையில் நேற்று தேர்தலில் வெற்றி பெற்ற நபர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெடுங்குன்றம் பகுதியில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் விஜயலட்சுமி கலந்துகொண்டு பதவியேற்றார். பின்னர் மேடையிலிருந்து விஜயலட்சுமி கீழே இறங்கிய போது, அங்கு வந்த ஓட்டேரி காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்பொழுது அங்கு கூடியிருந்த விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் காவல்துறையினரை, சூழ்ந்து கொண்டு எதற்காக வார்டு உறுப்பினரை அழைத்துச் செல்கிறீர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



 

இதுகுறித்து விஜயலட்சுமி தரப்பில் விசாரித்தபோது,  ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவோடு தேர்தலில் போட்டியிட்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை, கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இது அராஜக செயலாகும் இதற்கு காவல்துறை தகுந்த பதிலளிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் தனது கணவர் பாஜகவில் சேர்ந்ததால், ஆளும் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு தன்மீது பொய் புகார் கூறி கைது செய்துள்ளது என்று விஜயலட்சுமி தரப்பில் கூறப்படுகிறது.



 

காவல்துறையினர் தரப்பில் விசாரித்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம்  விஜயலட்சுமி கஞ்சா விற்பனை செய்ததாகவும், அந்த புகாரின் பேரில் அவரை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.  விஜயலட்சுமி மீது, கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

டிஜிபி அலுவலகத்தில் புகார்

 

முன்னதாக, கடந்த மாதம் 22ஆம் தேதி டிஜிபி அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினராக போட்டியிட மனுதாக்கல் செய்திருக்கிறேன். நான் தலித் என்பதாலும், என் கணவர் சூர்யா மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் என்னிடம் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் அசோகன், விசாரணை என்ற பெயரில் அநாகரிகமாகப் பேசுகிறார். என்னுடைய செல்போன், காரைப் பறிமுதல் செய்து வைத்திருக்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதைக் கொடுக்காமல் இழுத்தடித்துவருகிறார். எனவே, காவல்துறை சார்பில் எனக்கு எந்தவிதத் தொந்தரவும் ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தான் விஜயலட்சுமி   கைது செய்யப்பட்டுள்ளார்.



 

நாளை நடக்க உள்ள மறைமுக தேர்தலில், துணை தலைவராக போட்டியிட விஜயலட்சுமி முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்காக வார்டு உறுப்பினர்களிடம் விஜயலட்சுமி ஆதரவு கேட்டிருந்தார். பிரபல ரவுடியின் மனைவி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.