செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நேற்று  விடுதலை சிறுத்தைகள் சார்பில் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன், கவிஞர் காசி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



 

நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறுகையில் , தமிழ் ஈழத்தில் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பு வளையத்தில் பொதுமக்கள் இருந்தபொழுதும், சிங்கள ராணுவம் தமிழ் மக்கள் மீது விமானம் மூலமாகவும், பல்குழல் பீரங்கி மூலமாகவும் ,ரசாயன குண்டுகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழனை 22 நாடுகள் சேர்ந்து தமிழ் ஈழத்தில் தமிழினத்தை அழித்தனர்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை வைகோ மற்றும் திருமாவளவன் ஆகிய இருவரும் இரட்டை குழல் துப்பாக்கிகள். இப்போது இருக்கும் சூழலில் சீனாவை இலங்கையிலிருந்து அகற்றுவதற்கு , தமிழீழ மக்கள் துணை நிற்பார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், தமிழ் மக்கள் மட்டும் இல்லாமல், இந்தியாவின் 130 கோடி மக்களும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தர வேண்டும். இந்தியா தங்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த என்றும் தமிழ் ஈழம் துணை நிற்கும் என பேசினார்.



 

இதனைத் தொடர்ந்து பேசிய கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில், 1948 இல் சுதந்திரம் கிடைத்து, அதில் இருந்து சுமார் 72 ஆண்டுகள் சிங்கள இனவெறியர்கள் தமிழ் இனத்தை அழித்து வருகிறார்கள். சிங்கள இனவெறியர்கள் தமிழர்களை அழித்த அடையாள நாளாக தான் நான் மே18 பார்க்கிறேன். இலங்கை இப்பொழுது இருக்கும் சூழலுக்கு காரணம், தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்வதற்காக, வெடிகுண்டுகளை வாங்குவதற்கு கடன் பட்டார்கள், அதன் மூலம் அவர்கள் எங்களை அழைத்தார்கள், இப்பொழுது கடன் அவர்களை அழித்து வருகிறது.

 

எங்களை அடித்து வெளிநாட்டுக்கு துரத்தின் விளைவாக , இலங்கை இருக்கும் இக்கட்டான சூழலில் வெளிநாட்டிலிருந்து, என் உறவுகள் அனுப்பும் பணத்தின் மூலம் தமிழ் மக்கள் இன்று பசியை ஆற்றி வருகிறார்கள். சிங்களர்கள் தற்போது நடத்தும் போராட்டம் வேறு,  நம் போராட்டம் வேறு. சிங்களர்கள் நடத்தும் போராட்டம் பஞ்ச போராட்டம், ஆனால் தமிழ் ஈழத்தின் போராட்டம் விடுதலைப் போராட்டம் என தெரிவித்தார்.



 

இதனை அடுத்து  திருமாவளவன் இறுதி உரை ஆற்றினார், அப்போது அவர் பேசுகையில், ”ஈழம் விடுதலை பெற நாம் சிலர் குழுக்களாக போராடி வருவது பத்தாது. ஆட்சி அதிகாரம் வல்லமை பெற்ற, சக்திகளில் துணை முக்கியம். ஆட்சி அதிகாரம் எவ்வளவு முக்கியம் என்பது இப்போது இருக்கும் கத்துக்குட்டிக்களுக்கு தெரியாது. இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு மட்டுமே மிக முக்கிய கட்சிகள். கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆட்சிக்கு வர முடியாது. அதை வைத்து பார்க்கும்பொழுது வல்லமை பெற்ற கட்சிகள் மூலமாகவே தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

 

என்னுடைய அரசியல் உத்தி பாதிக்கப்படும் என்பதால்தான், ஈழம் தொடர்பாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில், நான் கலந்து கொள்ளவில்லை என மறைமுகமாக பதில் அளித்தார். அனைத்துப் போர்களும் இறுதியில் பேச்சுவார்த்தையில்தான் முடியும், அதே போல ஒவ்வொரு போராளிக் குழுக்களும் ஆயுதம் எடுப்பதே பேச்சுவார்த்தைக்குதான். இப்பொழுது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருந்தால் அதைவிட சிறப்பு எதுவும் இல்லை என தெரிவித்தார்.

 



இந்த நினைவேந்தல் கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொது செயலாளர்கள், வன்னியரசு மற்றும் எஸ்.எஸ். பாலாஜி எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மண்டல செயலாளர் விடுதலை செழியன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்