வடகிழக்கு பருவ மழை 


வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கன மழை பெய்து பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். கோடி கணக்கில் நிதி ஒதுக்கி பணி நடந்தும் மழை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி உள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். 


அமைச்சர் துரைமுருகன் ஆய்வு


சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள முகத்துவாரத்தில் ஆய்வு மேற்கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பால் சென்னை மாநகரம் பாதிக்கப்படுவது உண்டு. அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எல்லாத் துறைகளுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அறிவுறுத்தலோடு நிற்காமல் அந்தந்த துறை செய்யக்கூடிய பணிகளுக்கு நிதியையும் முதலமைச்சர் ஒதுக்கினார்.


இதனால் இந்தாண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தால் அதிக இடங்கள் பாதிக்கப்படவில்லை. சென்னையில் வெள்ள நீர் கடலில் கலக்க வேண்டும் என்றால் மூன்று இடங்கள் தான் இருக்கிறது. ஒன்று கூவம் வழியாகவும், அடையார் வழியாகவும் எண்ணூர் வழியாகவும் கடலில் கலக்க வேண்டும்.


முகத் துவாரத்தில் வருடம் முழுவதும் நிரந்தரமாக திறந்திருக்கும். எந்த வெள்ளம் வந்தாலும் பாதிப்பு இல்லாத அளவுக்கு தூண்டில் வளைவு ரூ.70 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டதால் மழை வெள்ளம் வடிந்து கொண்டிருக்கிறது.


எதிர்க்கட்சித் தலைவர் மழை தடுப்பு பணிக்கு வெள்ளை அறிக்கை கேட்கிறாரே என்ற கேள்விக்கு ?


பத்திரிக்கை செய்தியில் கருப்பு மையால் வரும் அறிக்கையே போதும் எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? கூவம் ஆற்றை திமுக சீரமைப்பு செய்து வருவது போன்று அதிமுக செய்ததா ? இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை திமுக செய்துள்ளது என்றார்.