தமிழகத்தில் பருவமடைந்த பெண்களுக்கு தாவணி அணிந்து மஞ்சள் நீராட்டு விழா நடத்துவது போல் ஆந்திராவில் ஆண் மகனுக்கு பட்டுவேட்டி அணிவித்து நடத்தப்படும் வேட்டி அணியும் விழாவினை மாமல்லபுரத்தில் ஊரே வியந்து பார்க்கும் வகையில் 10-ம் வகுப்பு படிக்கும் தங்கள் ஒரே மகனுக்கு ஆந்திரா தம்பதியினர் நடத்தி அசத்தினர்.  அழைப்பிதழ் இல்லாதவர்களும் வந்து அறுசுவை உணவந்தி வேட்டி அணியும் விழாவை பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர் 

 



 

வேட்டி அணியும் விழா:


 

ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் உள்ள தொட்டவரம் கிராமத்தை சேர்ந்த எஸ்.வெங்கடேஷ்-ஹரிப்பிரியா தம்பதியரின் ஒரே மகன் வி.வெங்கடவினய்(வயது15), இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாட பிரிவில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். எஸ்.வெங்கடேஷ் கடந்த 24 வருடங்களுக்கு முன்பு மாமல்லபுரம் வந்த அவர் அங்குள்ள கோவளம்  சாலையில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பாத்திரங்கள், அலங்கார மேடை அமைக்கும் சப்ளையர்ஸ் கடை வைத்துள்ளார்.

 

தமிழகத்தில் எப்படி வயதுக்கு வந்த பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா(பூப்பனித நீராட்டு விழா) நடத்துகிறார்களோ? அதேபோல் ஆந்திராவில் பெண்களை போல் 15 வயது, என பருவ வயதை கடந்த ஆண் பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோர் தங்கள் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றி வேட்டி அணியும் விழா நடத்துவார்கள்.



 

 தமிழகத்தில் வேட்டி அணியும் விழா நடத்தும் கலாச்சாரம்  இங்கு இல்லை. மாறாக திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு பட்டுவேட்டி-சட்டை அணிந்து அழகு பார்ப்பதுண்டு. ஆனால் ஆந்திராவில் இன்றும் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், நகரங்களில் அந்த மண்ணின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இன்றளவும் வேட்டி திருவிழா நடத்தி வருகின்றனர். மாமல்லபுரத்தில் வெங்கடேஷ்-ஹரிப்பிரியா தம்பதியினர் பத்திரிக்கை அச்சடித்து, வாழை மரம், தோரணங்களுடன், பிரம்மாண்ட மேடை அமைத்து ஊரே வியந்து பார்க்கும் வகையில் தங்கள் ஒரே மகனுக்கு வேட்டி திருவிழா நடத்தி அசத்தி உள்ளனர்.

 



பிரம்மாண்ட விழா:


 

நம் தமிழகத்தில் மஞ்சள் நீராட்டு விழாவில் பூப்பெய்த பெண், எப்படி தாய்மாமன் முறையில் சீர் வரிசை தட்டுகளுடன் காரில் அழைத்து வரப்படுவாரோ அதேபோல் சிறுவன் வெங்கட்வினய் ஆந்திராவில் இருந்து வந்திருந்த உற்றார் உறவினருடன் மாமல்லபுரம் சாய்பாபா கோயிலில் தாய்மாமன் சீர் வரிசையுடன், செண்டை மேளம் முழங்க,  பழங்கால காரில் விழா நடக்கும் அரங்குக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

 

அங்கு விழா மேடைக்கு ஆந்திர மாநில பெண் நடன கலைஞர்கள் டான்ஸ் ஆடி விழா மேடைக்கு வெங்கட்வினய்-யை அழைத்து சென்றனர். பிறகு மேடையில் தாய் மாமன் பழம், பாக்கு சீர் வரிசை தட்டுடன் பட்டுவேட்டி-சட்டை வழங்கினார். அவர்களின் காலின் விழுந்து வெங்கட் வினய் வணங்கினார். பிறகு தனது தாய்மாமன் கொடுத்த பட்டு வேட்டி-சடடை அணிந்து வந்து மேடையேறினார். 

 

 



பிறகு வந்த நோட்டீஸ் வைத்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள், உறவினர்கள், உடன் படிக்கும் பள்ளி தேழர்கள் என வரிசையாக மேடையேறி சிறுவன் வெங்கட்வினய்-க்கு வாழ்த்து தெரிவித்து அன்பளிப்பு(மொய் பணம்), பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்தினர். வித்தியாசமான முறையில் அச்சடிக்கப்பட்ட இவ்விழா குறித்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவி இருந்ததால் அழைப்பிதழ் இல்லாதவர்கள் பலரும் ஆந்திராவின் பாரம்பரிய வேட்டி அணியும் விழாவை காண வந்திருந்ததை பார்க்க முடிந்தது.

 

 

இவ்விழாவில் அழைப்பிதழின் பேரில் கலந்து கொண்ட விருந்தினர்கள், உறவினர்கள் மற்றும் அழைப்பிதழ் இன்றி வந்த (அழையா விருந்தாளிகள்)அனைவருக்கும் பாரபட்சமன்றி சமத்துவத்துடன் வெங்கட்-ஹரிப்பிரியா தம்பதியினர் சாதி, மதம், மொழி கடந்து ஆந்திர, தமிழக சைவ உணவு விருந்து வழங்கி உபசரித்தனர்.   ஆந்திராவில் தங்கள் முன்னோர்களின் கலாச்சாரம், பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக அளவில் மாமல்லபுரத்தில் முதன், முறையாக வெங்கடேஷ்-ஹரிப்பிரியா தம்பதியினர் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் அடித்து தங்கள் ஒரே மகனுக்கு நடத்திய வேட்டி அணியும் விழா ஊரே வியந்து பார்க்கும் அளவில் ஆடம்பரமாக நடத்தி முடிக்கப்பட்டது.



 

தமிழத்தில் வேட்டி அணியும் விழா பழக்கவழக்கத்தில் இல்லாவிட்டாலும் இங்கு வந்து நேரில் பார்த்தவர்கள் பெண் பிள்ளைகள் இல்லாதவர்கள் இதுபோல் தங்கள் மகனுக்கு வேட்டி அணியும் விழா நடத்தி மகிழலாம் என்றும் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பேசி பரிமாறி கொண்டதை விழா அரங்கினுள் கேட்க முடிந்தது. இந்த வேட்டி அணியும் விழாவிற்கு வந்திருந்த தமிழகத்தை சேர்ந்த விருந்தினர்கள் பலரும் விழா நாயகன் சிறுவன் வெங்கட்வினய்-க்கு  விழா மேடையில் பரிசு, அன்பளிப்பு வழங்கி எடுத்து கொண்ட புகைப்படங்களை பலர் தங்கள் பேஸ்புக், வாட்ஸ் அட், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து  வருகின்றனர்.