மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் நாளை 20.10.2023 மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். 


தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் இன்று  அதாவது அக்டோபர் 19ஆம் தேதி காலமானார்.  இவருக்கு வயது 82.  கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர், இன்று மராடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார். 


இது தொடர்பாக முதலமைச்சர் தனது இரங்கல் குறிப்பில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.


ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.


அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான வழக்கப்படுத்தினார். நடைமுறைகளை


கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.


அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.


கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "நம்மைக் காக்கும் 48" திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.


உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.