கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய தொழில்நுட்பம் விரைந்து அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 


பால் உற்பத்தியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தினந்தோறும் பாலின் தரம், அளவு அடிப்படையில் பாலுக்கான கட்டணம் வழங்கப்பட்டு வந்தது.


பால் கொண்டு செல்வதில் முறைகேடுகள் நடப்பதால் அவற்றை தடுக்கவும், தரத்தை பரிசோதிக்கவும் வெளிப்படையான  நடைமுறையை பரிந்துரைக்கும்படி ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த பரிந்துரைப்படி  பாலின் தரம் குறித்த தர சோதனை மேற்கொண்டு, பால் உற்பத்தியாளருக்கு மின்னணு முறையில் தகவல் வழங்கி, உரிய தொகையை வழங்கப்படும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படும் என  பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை ஆணையர், 2016ல் அறிவித்தார்.


இப்புதிய நடைமுறை கடந்த ஆறு ஆண்டுகளாக அமல்படுத்தப்படாததால், மாவட்ட அளவில் பாலின் தரம் பரிசோதிக்கப்பட்டு, விலை வழங்கப்படும் என பால் வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.


இதை எதிர்த்தும், அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே தினந்தோறும் பாலின் தரத்தை அடிப்படையாக கொண்டு விலையை வழங்க உத்தரவிட வேண்டுமென 2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


அப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  மாவட்ட அளவில் பால் தரம் பரிசோதிக்கப்பட்டு விலை வழங்கப்படும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் 6 ஆண்டுகளாக அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.


இதனை ஏற்ற நீதிபதி அனிதா சுமந்த், வெளிப்படை தன்மையுடன் பரிசோதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டுமென்ற 2016ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.


 




மற்றொரு வழக்கு


தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னியமரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி குழுக்களை அமைக்க வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அகற்றப்பட்ட இந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு வழங்குவது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, அகற்றப்பட்ட அன்னிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கடந்தமுறை இதுசம்பந்தமான கோப்பு நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்பது நீதிமன்றத்தின் கண்ணியத்தை குலைப்பது ஆகாதா எனக் கேள்வி எழுப்பினர்.


இதையடுத்து, இந்த அறிக்கையை திரும்பப் பெறுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மஞ்சள் பை மிஷின் வைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்றுவது, கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கு என தனித்தனி குழுக்களை அமைக்க வேண்டும் என முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.