திருவள்ளூர் மாவட்டம் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை பைக்கில் சென்ற வாலிபர் மீது திடீரென்று கார் மோதியது. பைக் மீது கார் மோதிய காரணத்தினால் பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர்,கீழே விழுந்து படுகாயமடைந்தார் , படுகாயம் அடைந்த வாலிபர் சென்னை  - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் துடிதுடித்தபடி கிடந்தார். விபத்து குறித்து தகவலறிந்த, அந்த வழியாகச்சென்ற வாகன ஓட்டிகள் 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தனர். 108 அவசர ஊர்தி விபத்து நடந்த இடத்திற்கு வருவதற்கு  தாமதமானது. 



இந்நிலையில் அந்த வழியாக சென்னையிலிருந்து அரசு விழாவில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி நோக்கி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், விபத்தில் சிக்கி வலியால் துடித்து கொண்டிருந்த வாலிபரை கண்டதும் காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அந்த வாலிபரை மீட்டார். அதுவரையிலும் 108 அவசர ஊர்தி வரவில்லை.



எனவே அந்த வாலிபரை தனது காரிலேயே பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு விபத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் அனுப்பிவைத்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்பொழுது அந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விபத்தில் காயமடைந்த இளைஞர் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.



விசாரணையில், விபத்தில் காயமடைந்த இளைஞர் பூந்தமல்லி மேல்மாநகரை சேர்ந்த ராஜேந்திரன் (23), தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரிந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளார்.  விபத்தில் சிக்கிய இளைஞரை அமைச்சர் தனது காரில் மீட்ட சம்பவத்தை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். விபத்தில் சிக்கிய நபருக்கு அமைச்சர் தனது காரிலேயே அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து படங்கள் மற்றும் வீடியோக்களை அமைச்சரின் ஆதரவாளர்கள் பதிவேற்றி வருகின்றனர். பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்