மூலப்பொருட்களின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு , ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என தமிழக சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
நாடு முழுதும் உள்ள சிறு , குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச போட்டியை சமாளிக்கவும், உற்பத்தி செலவை குறைக்கவும், ஊக்குவிப்பு கொள்கை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழகத்தில் மூன்று இடங்கள் உட்பட, நாட்டின் 66 இடங்களில் தொழில்முனைவோரிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
சென்னை கிண்டியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். இதில், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் சங்க குறுந்தொழில்கள் தலைவர் மோகன், பொதுச் செயலர் வாசுதேவன் ஆகியோர் கூறியதாவது ;
கையிருப்பில் உள்ள மூலப்பொருட்களுக்கு வங்கிகள் கடன் வாங்கும் போது , அதன் மதிப்பில், 75 சதவீதம் வரை தான் கடன் வழங்குகின்றன. இதை, 90 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்காக, தனது கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கி மாறுதல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு விரைவாக பணம் கிடைக்க உதவும், 'டிரெட்ஸ்' எனப்படும் தள்ளுபடி திட்டத்தில், 250 கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் உள்ள அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்பதை, 100 கோடி ரூபாயாக குறைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கடன் வாங்கிய வங்கி மட்டுமின்றி எந்த வங்கியிலும் வங்கி கணக்கு துவங்க அனுமதிக்கு மாறும் கோரிக்கை வைக்கப்பட்டது என இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்டார்ட் அப் - நிறுவனங்களுக்கு உதவ தொழில் வளர் காப்பகங்கள்
தமிழகத்தில் இரண்டாம் மூன்றாம், நான்காம் நிலை நகரங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்குவோருக்கு உதவும் வகையில், தொழில் வளர் காப்பகங்கள் அமைக்க, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப்' டி.என்., நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்ப கட்ட செலவுகளை சமாளிக்க நிதியுதவி, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்லாமல் நடுத்தர நகரங்கள், கிராமங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்குவதை அரசு ஊக்குவிக்கிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் இரண்டாம், மூன்றாம், நான்காம் நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில், 100 'ப்ரீ இன்கியூபேஷன் சென்டர்’ எனப்படும் துவக்க நிலை தொழில் வளர் காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக, 47 இடங்களில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொழில் வளர் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தொழில் வளர் காப்பகத்துக்கு, தலா 7.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. தற்போது மீதமுள்ள, 53 தொழில் வளர் காப்பகங்களை அமைக்க, கல்வி நிறுவனங்களுக்கு ஸ்டார்ட் அப் டி.என்., அழைப்பு விடுத்து உள்ளது.