தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  வட தமிழகத்தின் கடலோர பகுதிவரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 



இந்நிலையில் நேற்று மாலை முதலே காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் இரவு 7 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இதே நேரத்தில் மழை விட்டுவிட்டு நள்ளிரவு வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வந்தது. அதேபோல் நள்ளிரவு செங்கல்பட்டு மாவட்டத்திலும் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
  



 

காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்துநிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், மறைமலைநகர், ராட்டின கிணறு, சிங்கபெருமாள்கோவில், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2 மணிநேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

 



வெப்ப சூழ்நிலை காரணமாக வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் திடீரென இரவு நேரங்களில் பெய்த கனமழையால் சில்லென்று காற்று அடித்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சில இடங்களில் மழைநின்ற பிறகும் மின்னல் அடித்து கொண்டிருந்தது.