அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. 






தெற்கு ஆந்திர நிலப்பரப்பு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. இது காற்றழுவு தாழ்வு பகுதியாக இருந்து மேலும் வலு குறைந்து வருகிறது.


அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.


இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து தினங்களில் ஓர் இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




24.11.2022 முதல் 27.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 




சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24  மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டின் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மழை தொடர்ந்து பரவலாக பெய்து வந்தது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.


இந்த நிலையில், சென்னையில் இன்று காலை எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பணிக்கு செல்வோர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.