நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.


சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.


இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில்  ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும்,  2016ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக செப்டம்பர் 13ஆம் தேதிக்கு நீதிபதி இளந்திரையன் தள்ளிவைத்துள்ளார்.


 




 


காவல் துறையினர் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவரை சமயபுரம் போலீசார் கைது செய்து லாட்ஜில் அடைத்து வைத்திருந்தனர். 2019ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கைது செய்யப்பட்ட முருகன், 15ம் தேதி மரணமடைந்தார்.


போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்ததாக புகார் கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதேபோல திருவெறும்பூரைச் சேர்ந்த ரத்தினம் என்பவரும் புகார் அனுப்பியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், திருச்சி நடுவர் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையில் இருந்தும், மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு விசாரணை அறிக்கையில் இருந்தும் முருகனை போலீசார் தாக்கியதால் தான் இறந்திருக்கிறார் என்பது நிரூபணமாகியுள்ளதாக கூறி, முருகனின் மனைவி சரசுவிற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


திருச்சி ராம்ஜிநகர்  காவல் நிலைய அப்போதைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், சமயபுரம் காவல் நிலைய  ஆய்வாளர் மதன் ஆகிய இருவரிடம் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும்; லால்குடி காவல் நிலைய அப்போதைய ஏட்டு விஜயகுமார், சிறுகானூர் காவல் நிலைய அப்போதைய காவலர் நல்லெந்திரன், கொள்ளிடம் காவல் நிலைய அப்போதைய காவலர் ரகுமான், திருச்சி சிபிசிஐடி ஏட்டு சரவணகுமார் ஆகிய நான்கு போலீசாரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயும் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்ட ஆணையம், இவர்கள் ஆறு பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது.