செங்கல்பட்டு நகராட்சி

 

செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் மற்றும் 60 ஆயிரத்து 204 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியை பொருத்தவரை கடைசியாக நடந்த 2006, 2011 நகர மன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகியவை மாற்றி மாற்றி கைப்பற்றின. தற்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகு நகர மன்ற தேர்தல் நடைபெறுவதால் திமுக , அதிமுகவிற்கு இடையே செங்கல்பட்டு நகராட்சி கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு தேர்தலிலும், நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 



 

குரங்கு குமார்

 

செங்கல்பட்டில் அசைக்கமுடியாத பிரபல ரவுடியாக இருந்து வந்தவர்தான் " குரங்கு குமார்" . தமிழகத்தில் குரங்கு குமாரை தெரியாத பிரமுகர்களே கிடையாது, என்ற அளவிற்கு குரங்கு குமார் செங்கல்பட்டு பகுதியில் கொடிகட்டி பறந்தார். குரங்கு குமாரின் அண்ணன்கள் இருவரும் செங்கல்பட்டு பகுதியில் முக்கிய ரவுடிகளாக இருந்து வந்தனர். அந்த செல்வாக்கை பயன்படுத்தி செங்கல்பட்டை தான் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் குரங்கு குமாரை காவல்துறையினர் அவரை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அப்பொழுதுதான் திருந்தி வாழ நினைத்த குமார் அரசியலுக்குள் நுழைந்தார்.



 

 நகரச் செயலாளர் குமார்

 

 செங்கல்பட்டு நகராட்சியில் 13-வது வார்டு மக்கான் சந்துப்பகுதியில் போட்டியிட்டு கவுன்சிலரனார் குமார். இதனையடுத்து, செங்கல்பட்டு   நகர்மன்றத் துணை  தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றினார். செங்கல்பட்டு, அதிமுக நகரச் செயலாளரான குமாருக்கு கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு கூடத் தொடங்கியது. கட்சிப் பணியை செங்கல்பட்டு நகர பகுதியில் வேகமாக செய்து வந்தார் குரங்கு குமார்.

 



செங்கல்பட்டை அதிமுகவின் கோட்டையாக மாற்ற பணிகளை மேற்கொண்டு வந்த குமாரின், மனதில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. இந்நிலையில் நவம்பர் 17 , 2007  நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்த பொழுதே குரங்கு குமார் முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்  ரவுடி ரவி பிரகாஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .

 

 

ரவி பிரகாஷ்

 

 

செங்கல்பட்டு அடுத்த திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி பிரகாஷ். குரங்கு குமாருக்கும் ரவிபிரகாஷ்க்கும் ஏற்கனவே ஒரு கொலை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதன் அதேபோல் குரங்கு குமார் இடத்தை பிடிக்க ரவி பிரகாஷுக்கு ஆசை இருந்து வந்தது. இதன் காரணமாகவே குரங்கு குமார் கொலை நடைபெற்றது. இதனையடுத்து ரவி பிரகாஷ் திமுகவின் நகர செயலாளரானார். இதனையடுத்து  " குரங்கு குமார் " இருந்த நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியையும் ரவி பிரகாஷ் கைப்பற்றினார். ஜனவரி 06, 2012 ஆம் ஆண்டு ரவி பிரகாஷ் 20 பேர் கொண்ட  கும்பலால் முகம் சிதைக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
  



 

 

மீண்டும் களத்தில் 

 

நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் குமாரின் மகனான M.K. சுரேஷின் மனைவி சிந்தியா செங்கல்பட்டு நகராட்சியில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட உள்ளார். தற்போது சுரேஷ் அதிமுகவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் மாணவரணி துணை செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

மீண்டும் அதிமுக செங்கல்பட்டு நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குரங்கு குமார் மகன் களத்தில் குதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரின் மருமகள் நேரடியாக மீண்டும் தேர்தலில் போட்டியிட இருப்பது செங்கல்பட்டு நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.