கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 


தென் மாவட்ட பயணிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  பயன்பாட்டிற்கு வந்தது. இருந்தும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்பொழுது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எழுந்த வண்ணம் உள்ளன . இந்த நிலையில் தமிழ்நாடு அரசு  ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில்,  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.




 1600 பேருந்துகள் இயக்கப்படுகிறது


இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்  சார்பில், அதன் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தென் தமிழகம் செல்லும் அனைத்தும் ஆம்னி பேருந்துகள்  பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்  27 டிராவல்ஸ் அலுவலகங்களும், 77 பயணிகளை ஏற்றும் இடமும்,  67 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கும் ஆக மொத்தம் 144 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடங்களே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளன. தினசரி சாதாரண நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1600 வரை ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.


44 ஆம்னி பேருந்துகள் மட்டுமே


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் (தினசரி சுமாராக ஆயிரம் பேருந்துகள்) கிளாம்பாக்கத்தில் நிறுத்தி இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில்  5 ஏக்கர் பரப்பளவில் அரசால் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக பஸ் நிறுத்தும் இடம் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த இடம் வேலை முடிவதற்கும் சுமாராக ஆறு மாதம் காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


90 நாட்களுக்கு   முன்னே முன்பதிவு


அந்த இடம் தயாராகும் வரை  பேருந்துகளை  கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல பலமுறை கோரிக்கை வைத்தும் CMDA நிர்வாகம் 1000 ஆம்னி பேருந்துகள் KCBTயில் பகலில் நிறுத்தி வைத்து பராமரித்து இரவில் இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி நாங்கள் பலமுறை கேள்விகளை எழுப்பியும் பதில் ஏதும் அளிக்காமல் போக்குவரத்து துறை சார்பாக சாத்தியம் இல்லாமல் 2002இல் உயர் நீதிமன்றம் விதித்த ஆணையை அவமதித்து 22.01.2024 அன்று ஆம்னி பேருந்துகள் 24.01.2024 முதல் சென்னை நகரத்திற்குள் வர அனுமதி இல்லை இரண்டு நாட்கள் மட்டும் கால வாசம் கொடுத்து சுற்றறிக்கை திடீரென அனுப்பப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு   முன்னே முன்பதிவு செய்துள்ள ஆம்னி பேருந்து பயணிகளின் பயணங்கள் கேள்விக்குறியாகி பயணிகள் பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.




எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை


இந்நிலையில் உயர் நீதிமன்ற ஆணையை மீறி சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து துறைக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. KCBTயில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக அரசு சார்பாக எங்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 ட்ராவல்ஸ் அலுவலகங்களும், 80  பயணிகளை ஏற்றும் இடமும்,  320 பஸ் நிறுத்தி வைக்கும் இடம்  ஆக மொத்தம் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலே உள்ளது.




ஆகையால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பயணங்கள்  தடைப்படாமல் இருக்க போக்குவரத்து துறை மற்றும் CMDA  உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்  என தெரிவித்துள்ளார்.  இன்று முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டுமென  அரசு சார்பில் அறிவித்துள்ள நிலையில்,  ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்