கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டிய சூழல் உள்ளதா தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் | Kilambakkam Bus Stand 

சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்பொழுது பொதுமக்கள் வந்து சேர்வதற்கு, பேருந்து மற்றும் தங்களுடைய சொந்த வாகனத்தில் வருவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. அருகே ரயில் நிலையங்கள் இல்லாததால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தவர்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் | Kilambakkam Railway Station 

தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.

வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமுறைகள் அமைக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள வசதிகள் என்ன ? 

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், டிக்கெட் அலுவலகம், குடிநீர் வசதி, இருக்கை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே நடைமேடைகளில் சிறுசிறு கடைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ரயில் நிலையம் என்பதால் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து, மின்சார ரயில்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், கூடுதலாக பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார் போல் 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சார ரயில்களை, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் நிலை என்ன ஆனது ? Kilambakkam Railway Station Latest News

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தாமதமானது. வருகின்ற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. தற்போது ரயில் நிலையம் கீழ்பகுதியில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் என்பதால் மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .