கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 
 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்  ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.  சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. 


 



ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 


 



திடீரென வந்த பிரச்சனை ( kilambakkam bus terminus water logging ) 
 
இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திடீரென புதிய பிரச்சனை வரத் துவங்கியுள்ளது. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறு மழைக்கு அதிகளவு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.


 



ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 


இந்த மழை நீரை வெளியேற்ற முறையான வடிகால், வசதி இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.   இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளம் மற்றும்  ஊடகங்களில் வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.  இதன் காரணமாக  தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது


 சிதலமடைந்த கல்வெட்டுக்கள்


இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது:  ”கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைந்த இடம் சற்று உயர்வாகவும்,  அதே போன்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் ,மழை பெய்யும் போது சிறிது நேரத்திலேயே அங்கு தண்ணீர்   தேங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனால் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் நீர் அங்கு தேங்கி வெள்ளமாக காட்சியளிக்கிறது.  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட  4 கல்வெட்டுகளும்  சேதம் அடைந்துள்ளது.  இதன் காரணமாக அதன் வழியாகவும்  தண்ணீர் போக முடியாத சூழல் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். 


 



ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 


 17 கோடி ரூபாயில் வடிகால் பணிகள் அமைக்க திட்டம்



இதனால் அப்பகுதியில் புதிய கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை 17 கோடி ரூபாயில்  செயல்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கால்வாய் அமைத்தால் மழை நீர் தேங்காமல்  நேரடியாக தண்ணீர் அடையாறு ஆற்றுப் படுகைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதேபோன்று, பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மழை நீர் சுமார் 180 அடி நீளம் உள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து, கிளாம்பாக்கம் ஏரி மற்றும் வண்டலூருக்கு ஏரி ஆகியவற்றுக்கு செல்லும் வழியில் மழை வடிநீர் தாழ்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


 



ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 


 45 நாட்களுக்குள் முடிக்க திட்டம்


வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாகவே,  முக்கிய பணிகளை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.