பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த நிலையில், தற்போது அதிகாலை முதலே தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன


தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.




கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்:



  • 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.

  • 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன

  • கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.

  • கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும். 

  • 2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும்

  • இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன.

  • தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

  • முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது

  • ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

  • விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  • 2025 இல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

  • ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது.


பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் அல்லாமல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகள் வெளியேறுவதற்காக பிரத்யேக சாலை விரிவாக்க வசதி மற்றும் பேருந்து முனையத்தின் முன்புறம் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி  ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 




கூடுதல் வசதிகள் என்னென்ன ?


இப்பேருந்து முனையத்தில் பயணிகளின் குடிநீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் நாளொன்றுக்கு 0.5 மில்லியன் லிட்டருடன் கூடுதலாக நிலத்தடி நீரை சுத்திகரிக்கும், 300 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள எதிர் சவ்வூடுபரவல் (RO) முறையிலான நீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) / தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் (MTC) செயல்பாட்டிற்காக தனியாக பேருந்து பராமரிப்புப் பணிமனை /பராமரிப்பிடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்,  மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 5 மின்கல ஊர்தி (Battery Operated Vehicles) வசதி செய்யப்பட்டுள்ளது. முனையத்தின் முகப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுகளுடைய  நடைபாதைகள் கொண்ட பூங்கா, பயணிகளின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் முனையத்தின் முகப்பில் ஆட்டோ / டாக்ஸி நிறுத்தத்திற்கு தனியாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.




 செயல்பாட்டுக்கு வந்தது


இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் தங்க்ள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்போது போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மக்கள் வசதிக்காகவும் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் நேற்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழு வீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்   தென் மாவட்டத்திலிருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு சொல்லக்கூடிய அனைத்து விரைவு பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.   இதன் மூலம் இன்று முதல் விரைவு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.