New Year Safety: சென்னையில் புத்தாண்டை 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புத்தாண்டு கொண்டாட்டம்:


2023 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டான 2024ம் ஆண்டு வர, இன்னும் சில மண் நேரங்களே உள்ளன. அதனை வரவேற்க  உலகமே ஆர்வத்துடன் காத்திருக்கிறது. இதையொட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புத்தாண்டை பாதுகாப்புடன் கொண்டாடுவதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று மாலை முதல் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், கொண்டாட்டங்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 


பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்:


புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18,000 பேர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு உதவியாக சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


6000 சிசிடிவி கேமராக்கள்:


வாகனங்களில் வேகமாக செல்வது, ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவது, சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நகர் முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிக கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன.  இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். கேளிக்கை விடுதிகள், ரெசார்ட், ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். பாதுகாப்பு கருதி சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் இரவு நேரத்தில் மூடப்படும். 


கண்காணிப்பு குழுக்கள்:


புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டிய பைக் ரேஸ் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, இன்று இரவு 09.00 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பி கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி,  சென்னை, மயிலாப்பூர். கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை. பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர்,  கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்ள உள்ளனர்.  இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


பட்டாசுகள் வெடிக்க தடை:


பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும். ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். 


உதவி மைய கூடாரங்கள்:


புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள். குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் Drone Camera க்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகிறது.


கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அவசர மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace, Flickering Light பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.