இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கமானது மீண்டும் அதிகரித்து  வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கடலூரில் கொரோனா தொற்றால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்தி வருகிறது. காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவன உரிமையாளர்கள், அங்கு பணியாற்றும் ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள் என வர்த்தக நிறுவனம் சார்ந்த அனைவரும் ஒரு வார காலத்திற்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கடைகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

 


 

 

இது தொடர்பாக காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோயில் பகுதியில் இது வரை தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அங்கு பணியாற்றும் ஊழியர்கள், சாலை யோர வியாபாரிகள் ஒரு வார காலத்திற்குள் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

 

தவறினால் வணிக நிறுவன உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் கடை திறக்க தடை விதித்து, தொடர்புடைய நபர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதனால் கொரோனா பரவலை நிச்சயமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் அதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.