காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன். இவருடைய மனைவி கன்னிகா/32. இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கன்னிகா மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கருத்தடை சாதனம் காப்பர் டீ பொருத்தியுள்ளார். கடந்த 26 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மஞ்சுளாவால் காப்பர் டி அகற்றப்பட்டது. 



அதன் பின்பு இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று வரை கடினமான வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் சாப்பிட முடியாமலும் நெஞ்சு வலி சிறுநீர் கழிக்கும் இடம் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் கன்னிகா அவதிப்பட்டு வந்ததாகவும், நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகப்படியான வயிற்று வலி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பயங்கரமான வேதனையில் துடித்ததாகவும். இதனால் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்த கன்னிகா பணியில் இருந்த மருத்துவ பணியாளரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பிரசவ அறைக்கு அழைத்துச் சென்ற மருத்துவ ஊழியர் கையில் க்ளவுஸ் அணிந்து தன்னை பரிசோதிப்பது போல் நடித்து ஆனால் தன்னை பரிசோதிக்காமல் திங்கள்கிழமை வா என்று சொல்லி அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதனால் மனம் உடைந்து போன கன்னிகா மீண்டும் வேதனையில் துடித்துள்ளார். இதைத்தொடர்ந்து காலை சிறுநீர் கழிக்கும்போது மருத்துவ மனையில் பயன்படுத்துகிற எலுமிச்சம் பழம் அளவிலான காட்டன் துணி கீழே வந்து விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன கன்னிகா மற்றும் உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சென்று இதுகுறித்து மருத்துவ ஊழியரிடம் கூறியுள்ளனர். மருத்துவர் மற்றும் ஊழியர் பரிசோதனை செய்யாமலும், சரியான பதில் அளிக்காமலும் அலட்சியமாக பேசியுள்ளனர். 



 இதனால் வேதனை அடைந்த கன்னிகா மற்றும் அவரது குடும்பத்தினர் 3 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவ வளாகத்தில் காத்துக் கிடந்தனர். மேலும் தலைமை மருத்துவர் கைலாஷ் சொந்தமாக கிளினிக் வைத்திருப்பதால் அரசு மருத்துவமனையில் நடக்கின்ற அவலங்களை கண்டு கொள்வதில்லை என்றும் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பணி நேரத்தில் தலைமை மருத்துவர் கைலாஷ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவ உதவியாளர்களை சிகிச்சை அளிக்க வைப்பது பெரும் வேதனைக்குரிய விஷயம் என புகார் எழுந்துள்ளது. 

 

 

விளக்கம்

 

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணகுமாரி நம்மிடம் கூறுகையில், இந்த புகார் குறித்து மருத்துவர்கள் இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்  பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படும் என கூறினார்.