காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதலே பெய்து வரும் இடியுடன் கூடிய தொடர் மழை.

 

 காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை

 


காஞ்சிபுரம் (Kanchipuram News): சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



 

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

 

மழையின் காரணமாக காஞ்சிபுரம் நகரின் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளான பழைய ரயில் நிலையம் சாலை, மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், தாயாரம்மன் குளக்கரை, வேகவதி ஆற்றின் கரையோர குடியிருப்புகள், பல்லவர் மேடு பாளையம் குடியிருப்பு, உள்ளிட்ட காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.



 

முன்னேற்பாடுகளில் குறையா  ?

 

மழை பெய்யும் என ஓரிரு நாட்களுக்கு முன்னரே சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்று இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவிதமான முன்னேற்பாடுகளையும் செய்யாததால், அப்பகுதியில்  மழைநீர் வெள்ளம் போல் தேங்கி வருவதால், ஒருநாள் மழைக்கே  பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.



 

 

ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும்.. சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

 

காலை முதலே பெய்து வரும் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அதிக அளவாக  செம்பரம்பாக்கத்தில் 107 மில்லிமீட்டரும், குன்றத்தூரில் 88.20 மி.மீ, ஸ்ரீபெரும்புதூரில் 45 மிமீ, வாலாஜாபாத்தில் 36.50 மி.மீ, காஞ்சிபுரத்தில் 25.80 மி.மீ, உத்திரமேரூரில் 17 மிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மற்றும்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் நிலவரம்

 

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 133 ஏரிகள் 75%-100% , 335 ஏரிகள் 50%-75%,  331 ஏரிகள் 25%-50%, 109 ஏரிகள் 25% கீழ்  நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.