சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி, இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் மகிழ்ச்சி.

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ): தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் முடிவுற்ற நிலையிலும், கோடை வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஜூன் 18-ஆம் தேதி முதல் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


 

இடியுடன் கூடிய மழை

 

சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி நேற்று காலை முதலே லேசான மேகமூட்டம் காணப்பட்டு லேசாக மழை பெய்த நிலையில், வானிலை மையம் அறிவிப்பு படி இன்று அதிகாலை நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய மழை வந்தது. காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர்  உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

 

மழை பெய்து குளிர்ந்த காற்று

 

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் நுழைவாயிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனம் ஓட்டிகளும் ரயில் பயணிகளும் கடும் அவதி.திங்கட்கிழமை வேலை நாளான இன்று பல்வேறு பணிகளுக்கு அதிகாலை நேரத்தில் வெளியில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தவாறு சென்று அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சூட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது மழை பெய்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 



காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் நிலவரம்

 

 

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 133 ஏரிகள் 75%-100% , 335 ஏரிகள் 50%-75%,  331 ஏரிகள் 25%-50%, 109 ஏரிகள் 25% கீழ்  நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு

 

7 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு குறித்து தற்பொழுது பார்க்கலாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உட்பட்ட காஞ்சிபுரம் பகுதியில் 25 .80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வாலாஜாபாத்தில் 36.50 மில்லி மீட்டர் மழை உத்திரமேரூரில் 17 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது ஸ்ரீபெரும்புதூரில் 45 மில்லி மீட்டர் மழை குன்றத்தூரில் 88.20மில்லி மீட்டர் மழை செம்பரம்பாக்கத்தில் 107 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 319.50 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது சராசரியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துள்ள மழையின் அளவு 53.25 மில்லி மீட்டராக உள்ளது இதுவரை பெய்த மழையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது