80 -களில் வந்த திரைப்படத்தில் கண்டிப்பாக செருப்பு திருடும் காட்சிகளில், நடிகர்கள் நடித்திருப்பார்கள். அதேபோல் 90களில் வந்த திரைப்படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகளிலும், செருப்பு திருடும் சீன்கள் இடம்பெற்று இருக்கும். சமீபத்தில் வெளியான நடிகர் சூரி திரைப்படத்தில் கூட செருப்பு திருடும் காட்சி இடம் பெற்று இருந்தது.



 

தமிழ்நாட்டில் கோவில்கள் கடைகள் உள்ளிட்ட இடங்களில்,  செருப்பை திருடுவது என்பது, தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. செருப்பை திருடுபவர்களுக்கு அப்படி என்ன அதில் சந்தோசம் என தெரியவில்லை, ஆனால் நம்மில் பலரும் கோவிலுக்கோ கடைகளுக்கோ சென்ற பொழுது செருப்பை பறிகொடுத்து இருப்போம், ஆனால் செருப்பை கண்டுபிடிக்க முடியாமல் வெறும் காலுடன் நடந்து வந்திருப்போம். ஆனால் இப்பொழுது தான் சிசிடிவி காட்சி இருக்கிறது, அந்த வகையில் செருப்பை திருடி செல்லும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள் தான் காஞ்சிபுரத்தில் இப்பொழுதே வைரல்.



 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் என்றாலே, கோயிலுக்கும் பட்டுக்கும் பெயர்பான காஞ்சிபுரத்தில், பிரபல துணைக்கடைகள் பல உள்ளன. அந்த வகையில் காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில்  இயங்கி வரும் இளைஞர்களுக்கு என பிரத்தியேகமாக உள்ள துணிக்கடையில், நேற்று பொதுமக்கள் பொங்கல் பண்டிகை ஒட்டி துணி எடுக்க குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துணிக்கடைக்கு, துணி எடுக்க சென்றுள்ளார். அப்பொழுது தனது  காலணியை கடையின் முன்பு விட்டுவிட்டு உள்ளே சென்று துணி எடுத்து வந்துள்ளார்.



பின்பு துணி எடுத்து முடிந்தவுடன், தனது காலணியை தேடிய பொழுது அப்பொழுது அவரது காலனி காணவில்லை என தெரிகிறது. அவர் அந்த காலணியின் விலை சுமார்  2500 ரூபாய் கொடுத்து வாங்கியதாக தெரிவிக்கிறார். இதனை அடுத்து கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, வேறொரு இளைஞர் துணிக்கடையில் இருந்து துணி எடுத்து விட்டு வெளியே வந்து எந்த காலணி நன்றாக உள்ளது என்று பார்த்துவிட்டு சென்று விடுகிறார். மீண்டும் அந்த இளைஞன் தனது காலணியை வண்டி அருகே விட்டு விட்டு  புதியதாக உள்ள இந்த காலனி கடகடவென காலில் அணிந்து கொண்டு சென்று விடுகிறார்.தற்போது புத்தாடை எடுக்க வந்து புது காலனியை எடுத்து செல்லும் சிசிடி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.