தமிழகம் முழுவதுமே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழக அரசு தடை செய்துள்ளதுள்ள நிலையிலும் மறைமுகமாக பல இடங்களில் இந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக அவ்வப்பொழுது  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும்,பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



 

இந்நிலையில் கோவில் நகரமானதும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கின்ற  காஞ்சிபுரம் மாநகராட்சியை பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக முழுமையாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தான் காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி உத்தரவின்படியும், காஞ்சிபுரம். மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரிலும், மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், குமார், முகமது இக்பால், லட்சுமி பிரியா உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் இன்று காஞ்சிபுரம்  மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம், செங்கழுநீரோடை வீதி,மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள பூக்கடைகள், சாலையோர கடைகள், மளிகை கடைகளில்  என பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த திடீர் ஆய்வை  மேற்கொண்டனர்.



 

இந்த ஆய்வின் போது  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய சுமார் 75 கிலோ பிளால்டிக் பைகளை பறிமுதல் செய்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக சுமார் 11,000 ரூபாய் அபராதத்தையும் விதித்தனர். இந்த அபராதம் விதிப்பை வழக்கம் போல் கைகளால் எழுதி கொடுக்கும் சீட்டு முறையை தவிர்த்து டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் முறையினை பின்பற்றி கையடக்க டிஜிட்டல் இயந்திரம் மூலம் அபராதம் சீட்டினை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வழங்கினர்.

 

இதனால் அபராதம் வசூலிக்கும் தொகையில் எவ்விதமாக தவறுகளும் ஏற்படாமல் வெளிப்படை தன்மையாக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.



 

மேலும் கடை உரிமையாளர்களிடம் இனி வருங்காலங்களில் எப்போதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.