காஞ்சிபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் தற்போதைய மேயராக மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். மகாலட்சுமிக்கு ஆரம்பம் முதலே சிக்கல்கள் இருந்த வண்ணம் உள்ளன. திமுக அவருக்கு மேயராக சீட் வழங்கிய பொழுது, அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா என்பவர் மேயருக்கு போட்டியிட்டார். அவருக்கு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுகவின் சேர்ந்த சில கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தது. மகாலட்சுமி யுவராஜுக்கு முதல் சோதனை, மேயர் தேர்தலில் இருந்தே துவங்கிவிட்டது.


 


பிரச்சனையின் துவக்க புள்ளி


 


இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கும்,  மகாலட்சுமி யுவராஜ் தரப்பிற்கும் பிரச்சனைகள் அதிகரிக்க துவங்கியது. அதேபோன்று மாநகராட்சி முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கவே கடும் நெருக்கடி உருவாக துவங்கியது. மாநகராட்சி ஆணையராக இருந்த கண்ணன், மேயர் தரப்பு அழுத்தத்தால் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது மாநகராட்சி ஆணையராக உள்ள செந்தில் முருகன் மேயர் தரப்பிற்கு மட்டும் ஆதரவாக இருப்பதாகவும், மற்ற கவுன்சிலர்களை கண்டுகொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது. கவுன்சிலர்கள் நேரடியாக ஆணையரை சந்திக்க கூட முடிவதில்லை என்ற புகார் வெளிப்படையாகவே திமுக கவுன்சிலர்களால் வைக்கப்பட்டது.





இந்தநிலையில் திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கு இடையே பனிப்போர் துவங்கியது. இதன் காரணமாக பெரும்பான்மை இருந்தும் தீர்மானங்களை, நிறைவேற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார் மேயர் மகாலட்சுமி. கணவர் யுவராஜின் ஆதிக்கம் மாநகராட்சி முழுவதும் இருப்பதாகவும், ஒரு சில கவுன்சிலர்கள் மட்டுமே பயன் பெற்று வருவதாகவும் ஆளும் திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டை அள்ளி வீசினர்.



வீதிக்கு வந்த பிரச்சனை


 


பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரவே, மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்களும், எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் கைகோர்க்க துவங்கினர். மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டுமென, திமுக கவுன்சிலர்கள் 17 பேர், அதிமுக கவுன்சிலர்கள் 7, பாமக கவுன்சிலர்கள் 2, காங்கிரஸ் துணை மேயர் குமரகுருநாதன், சுயேச்சைகள் 5, பாஜக ஒருவர் என 33 பேர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஏழாம் தேதி புகார் மனு அளித்தனர்




கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாக மாநகராட்சி கூட்டங்கள் கூட நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாததால், மாநகராட்சியும் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேயர் தரப்பு மாவட்ட செயலாளர் சுந்தரியின் ஆசி பெற்ற நபர் என்பதால், அவருக்கும் நெருக்கடி அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட திமுக கவுன்சிலர்கள் - மேயர் தரப்பு ஆகியோரை வைத்து மாவட்ட செயலாளர் பஞ்சாயத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. பஞ்சாயத்து நடைபெற்ற பிறகும், எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் சேர்ந்து கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக கவுன்சிலர்கள் கோரிக்கையை எழுப்பி உள்ளனர்.


 



சரி சரி பஞ்சாயத்தை கூட்டு


இப்பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்து அறிவாலயம் வரை சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கட்சி மேலிடம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவை அழைத்து பிரச்சனையை தீர்க்க உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தர் முன்னிலையில், திமுக மற்றும் திமுக ஆதரவு பெற்ற சுயேட்சை கவுன்சிலர்கள் மற்றும் காங்கிரஸ் துணை மேயர் குமரகுருநாதன் என 25-க்கு மேற்பட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 


 


அமைச்சரிடம் சொன்னது என்ன ?


மேயர் மற்றும் மேயர் கணவர் ஆகியோரின் ஆதிக்கம் மாநகராட்சி முழுவதும் அதிகரித்து வருகிறது. கவுன்சிலர்களை மதிப்பதில்லை, ஆணையரும் ஒரு சார்பு நிலையில் செயல்படுவதால் பொது மக்களுக்கு அடிப்படை விஷயங்கள் கூற செய்து தர முடியவில்லை. இதனால் ஆளும்கட்சி கவுன்சிலராக இருந்தும், எந்தவித மரியாதை இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமைச்சரிடம் முன் வைத்துள்ளனர். பிரச்சனை இன்றி இரண்டு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மறுபுறம் அமைச்சர் மேயர் தரப்பிடம், கவுன்சிலர்கள் முன்னிலையில் காட்டமாக பேசியுள்ளார்.


 




மேயர் தரப்பு ஆதரவு கவுன்சிலருக்கு மேயருக்கு ஆதரவான சில விஷயங்களையும் அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் மேயர் மகாலட்சுமி தலைமையின் கீழ் எங்களால் பணியாற்ற முடியாது, எனவே மேயரை மாற்றியே ஆக வேண்டும் என 18 கவுன்சிலர்கள் வரை விடாப்படியாக இருந்ததால் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நாங்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக 18 கவுன்சிலர்கள் வரை  மாவட்ட செயலாளர் சுந்தரிடம் மனு அளித்துள்ளனர்.


 


 தொடர் தலைவலியில் மேயர் தரப்பு


திமுக மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஆகிய எண்ணிக்கையை வைத்து பார்க்கும் பொழுது மேயர் தரத்திற்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேயர் தரப்பிற்கு எதிராக 30 கவுன்சிலர் வரை இருப்பதாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். 51 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் இந்த சமயத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவது மேயர் தரப்பிற்கு பெரிய தலைவலி தான் போல. மறுபடியும் தலைமைக்கு இந்த பிரச்சனையை எடுத்துச் செல்லவும் திமுக கவுன்சிலர்கள் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை சுந்தர் தலைமையில் நடைபெற உள்ளது