காஞ்சிபுரத்தில் மாநகராட்சியிடமும், தொல்லியல் துறையிடமும் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டினை அரசு அலுவலர்கள் இடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர், அருள்ஜோதி. இவர் காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அருள்ஜோதி தனக்குச் சொந்தமான இடத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு மாடி வீடுகளை கட்டியுள்ளார்.

 



 

அதேநேரம், அருள்ஜோதியின் பக்கத்து வீட்டுக்காரரான குப்புசாமி, அருள்ஜோதி தனக்குச் சொந்தமான இடத்தில் 3 அடி இடத்தையும் சேர்த்து வீடு கட்டியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். மேலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில் அருகே 300 மீட்டர் தொலைவில் எந்த ஒரு கட்டடத்தை கட்டினாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது.


ஆனால், அருள்ஜோதி தொல்லியல் துறையிடமும், மாநகராட்சி நிர்வாகத்திடமும் உரிய அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது. இவ்வாறான குறிப்புகளையும் குப்புசாமி தனது வழக்கில் குறிப்பிட்டுள்ள நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

 




 

இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த வீட்டை இடிக்க தொல்லியல் துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்களும், தொல்லியல் துறை அலுவலர்களும், காவல் துறை பாதுகாப்புடன் வந்து அருள்ஜோதியின் வீட்டை இடிக்கத் தொடங்கினர். கட்டிய வீடு கண்ணெதிரிலேயே இடிக்கப்படுவதைக் கண்ட அருள்ஜோதி குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண