காஞ்சிபுரம் , இருளர் குடியிருப்பு

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை நேற்று தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்ய வருகைப்புரிவதற்கு முன்னர்  அக்குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 



 

மாவட்ட ஆட்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

 

மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின் போது இருளர் பழங்குடியினருக்காக ஒவ்வொரு குடியிருப்புகளும் ரூ.4 லட்சத்தி 62 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வருவது தெரிய வந்ததை கண்டு கடும் அதிர்ச்சையடைந்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து விளக்கம் கேட்க இக்குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர் பாபு என்பவரை அழைத்து அது குறித்து முறையிட்டு அவரை கடுமையாக கடிந்து கொண்டு வசைப்பாடினார்.



 

லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்

 

குறிப்பாக ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இவ்வாறு தரமற்ற வகையில் கட்டுவது எவ்விதத்தில் நியாயம் என்றும், இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பலமுறை நடந்த கூட்டங்களில் அறிவுறுத்தியும், நீங்கள் இவ்வாறு பணியை மேற்கொண்டுள்ளீர்கள். இது போன்று ஈடுபட்டால் தங்களை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடித்து தான் கொடுக்க வேண்டும் என்றும், தரமான முறையில் கட்டித்தர முடியவில்லை என்றால் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரீடும் என கடுமையாக கடிந்துக் கொண்டார்.

 

 

வரவேற்பை பெற்றுள்ளது

 

மேலும் தரமற்ற வகையில் குடியிருப்புகளை கட்டும் இந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து மாற்று ஒப்பந்ததாரர் மூலம் பணியை மேற்கொள்ளுங்கள் என மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீ தேவியிடம் அறிவுறுத்தினார். ஏழைகளுக்காக கட்டுப்படும் குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்படுவதை கண்டறிந்து ஒப்பந்ததாரரை கடிந்து கொண்டு நல்ல தரமான முறையில் குடியிருப்புகளை கட்டி கொடுக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்ட மாவட்ட ஆட்சியரின், இந்த செயல்பாடுகள் சமூக ஆய்வாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.