திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இவர்களின் மூத்த மகள் டானியா. ஒன்பது வயதாகிறது.



 

டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று  வருகிறார். சிறுமி டான்யா  மிகஅரிய  வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதி அடைவது குறித்து செய்தி ஊடகங்களில்  வெளியிடபட்டது.



 

 

இதனை அறிந்த  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு மூலம் செய்து தரப்படும் என கூறியிருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிந்தவுடன் சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி சவீதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவியதற்காக முதல்வருக்கு சிறுமி டானியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

 



 

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி டானியாவிற்க்கு  10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை  நடைபெற்று முடிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் ஐசியூ வார்டில் இருந்த சிறுமி டானியா நேற்று நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர்கள் பெற்றோரிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து நலம் விசாரிப்பதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் முதல்வர் சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.