கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதுவரை மாத்திரை மற்றும் மருந்துகள் எதுவும்  கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தும் பல்வேறு சிகிச்சை முறைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை குணம் படுத்துகின்றன என கண்டுபிடிக்கப்பட்டு  அந்த சிகிச்சை முறைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் அந்தந்த நாட்டை சேர்ந்த பாரம்பரிய முறைப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இதில் பல நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

 



அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரிய முறையான சித்த மருத்துவம் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களும்  பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். நிலவேம்பு கசாயம் ,கபசுர குடிநீர் உள்ளிட்டவை நல்ல பலன் தருவதாக சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சில ஆய்வுகளின் அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெறுவதற்காக புதிதாக பல சிறப்பு சிகிச்சை மையங்கள் துவங்கி வருகிறது. சில தனியார் மருத்துவமனைகளும் தற்போது சித்த மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை மையங்களை துவங்கியுள்ளன.

 



 

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மாவட்ட சித்த மருத்துவ பிரிவு சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் கடந்த மே மாதம் 17-ந் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனால் தொடங்கி வைக்கப்பட்டது. 



 

இந்த சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை 232 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 194 பேர் 20 நாட்களில் குணமடைந்து விட்ட னர். எஞ்சிய 38 பேர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு காலையில் மஞ்சள்பொடி, உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தல், மூலிகை தேநீர், எட்டு வடிவ நடைபயிற்சி, உடற்பயிற்சிகள், வர்மம் மற்றும் கைவிரல்களால் நோயை குணப்படுத்தகூடிய முத்திரை பயிற்சிகள், கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது.



மாலையில் சுவையின்மை குறைவை போக்க ஓமப்பொட்டலம் நுகர்தல், தேன் கலந்த ஆரோக்கிய பானம், நெல்லிச்சாறு போன்றவையும் வழங்கப்படுகிறது. குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கும் நெல்லிக்காய் லேகியம், உடல் வலியை நீக்கும் அமுக்கரா சூரண மாத்திரை போன்றவை அடங்கிய மருந்து பெட்டகமும் கொடுத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேபோல் இந்த சிறப்பு சித்த சிகிச்சை மையத்தில் மூன்று வேளையும் மூலிகை உணவுகள் அளிக்கப்படுகின்றன . அதேபோல் இந்த சித்த  மருத்துவமனையில் லேசான அறிகுறி மற்றும் மிதமான அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாளில் 194 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.