காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கும் சத்தியம் கிரான்ட் தனியார் கேளிக்கை விடுதியில் உள்ள செப்டிக் டேங்கில் சுத்தம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்சிபட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன் குமார் (28), திருமலை(22) ஆகியோர் சென்றுள்ளனர்.

 

அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கி செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்து பலியாகினர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலாளர் பழனி ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோரை கைது செய்துள்ளனர். தனியார் விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி தலைமறைவாக உள்ள நிலையில் தனிப்படை வைத்து தேடிக்கொண்டு வருகின்றனர்.

 



இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய துணை தலைவர் அருண் ஹோண்டர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் பலியான செப்டிக் டேங்க்கை ஆய்வு செய்தார், பின் உயிரிழந்த குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் நிறுவனம் சார்பாக இழுப்பீடாக 15 லட்சம், தமிழக ஆதிதிராவிட நல வாரியம் சார்பாக 12 லட்சம் என தலா 27 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என வழங்க முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹோண்டர் 3 குடும்பங்களுக்கும் தலா 16 லட்சத்தை வழங்கினர். மேலும் ஒரு குடும்பத்திற்கு வரிசுதாரருக்கு அரசு வேலை ஆணையை வழங்கினார். ஒருவாரத்தில் மீதமுள்ள 2 குடும்ப வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும். இதில் மீதம் உள்ள 6 தமிழக அரசு ஆதிதிராவிடர் நலவாரியம் மூலம் விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.



பின் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,  “இதுபோன்று விபத்து தொடர்ந்து நடைபெற்று வருவதால் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டிக் டேங்க்கில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் சார்பில் இலவச டோல் ஃப்ரீ நம்பர் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என ஆட்சியர் தெரிவித்தார்.



 

செய்தியாளர் சந்திப்பு

 

 

பின்னர் சென்னையில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனித கழிவுகளை அகற்ற கழிவுநீர்த்தொட்டிக்குள் மனிதர்களை பயன்படுத்தினால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என எச்சரித்ததுடன், இதுகுறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

 

சம்பவத்தில் உயரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை 21 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். உயிரிழந்த நவீன்  என்பவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதுடன் இருவரது குடும்பத்தினருக்கு  கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும். குடும்பத்தினருக்கு  மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார். சம்பவம் தொடர்பாக  72 மணி நேரத்தில் விசாரணை மேற்கொண்டு சம்பந்த பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கழிவுநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.