பாலியல் சர்ச்சையில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரிக்கு வரப்போவதில்லை என, அக்கல்லூரி மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


மாணவிகள் திட்டவட்டம்:


”பாலியல் புகாருக்குள்ளானவர்கள்  மீது நடவடிக்கை எடுக்காத சூழலில் ஏப்ரல் 5ம் தேதி கல்லூரிக்கு திரும்ப முடியாது. புகாருக்குள்ளான  அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்கும் வரை மீண்டும் கல்லூரிக்கு வரமாட்டோம். குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் கலாஷேத்ரா நிர்வாகம்  நடவடிக்கை எடுக்காத நிலையில், எவ்வாறு கல்லூரிக்கு வருவது” என மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாலியல் சர்சசை காரணமாக ஏற்கனவே ஏப்ரல் 6ம் தேதி வரையில் கலாஷேத்ரா மூடப்பட்ட நிலையில், 5ம் தேதி கல்லூரி திறக்கப்பட்டு  தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கல்லூரிக்கு வர மாணவிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


கலாஷேத்ரா இயக்குனர் ஆஜர்:


கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது எழுந்த புகார் தொடர்பாக அந்த அமைப்பின் இயக்குனர் மகளிர் ஆணையம் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். அதுதொடர்பான அறிக்கை விரைவில் அரசிடம் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், கலாஷேத்ரா கல்லூரி பேராசியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த குற்றச்சாட்டின் பேரில் அவர்  மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே ஐதராபாத்தில் நடைபெற்ற கலைநிகழ்சியில் பங்கேற்க சென்ற ஹரி பத்மன் தலைமறைவாகி இருந்தார். அதைதொடர்ந்து அவரை தேடி வந்த போலீசார், சென்னையில் இருந்து தோழி வீட்டில் வைத்து ஹரி பத்மனை கைது செய்தனர்.


பாலியல் புகார் என்ன?


சென்னை திருவான்மியூரில் காலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது.


இந்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது வதந்தி என்று கூறப்பட்டு வந்தது. கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாப்பாத்திங்களில் நடிக்க வேண்டுமானால், ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஆசிரியர் மிரட்டியதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


மாணவிகளுக்கு தடை:


ஆனால், அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் கலாஷேத்ராவின் பெருமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகள் என்றும், இனி மாணவர்கள் இச்சம்பவம் குறித்துப் பேசவோ, இணையத்தில் கருத்துகள் பகிரவோ கூடாது என்றும் கலாஷேத்ரா நிர்வாகம் மாணவிகளுக்கு தடை விதித்ததாகவும் தகவல்கள் கிடைத்தன. 


c.a.r.e.spaces மூலம் புகார்:


இதையடுத்து, இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'கேர்ஸ்பேசஸ்' (c.a.r.e.spaces) எனும் அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தற்போது பயின்று வருபவர்கள் மட்டுமின்றி, முன்னாள் மாணவர்கள் பலரும் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆதாரங்களை திரட்டிய 'கேர்ஸ்பேசஸ்' அமைப்பு, தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தது.


தேசிய மகளிர் ஆணையம் புகார்


இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். கல்லூரி மாணவிகள் 30 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.