வீடு , மனை பத்திர பதிவு - GPS புகைப்படம் அவசியம்

Continues below advertisement


தமிழகத்தில் வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் , அதற்கான பத்திரங்களை , சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். இதில் எவ்வித முறை கேடும் நடக்க கூடாது என்பதற்காக பதிவுத்துறை பல்வேறு பாதுகாப்பு வழி முறைகளை அமல்படுத்தி உள்ளது. இதன்படி , பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்து , உண்மையிலேயே உள்ளதா என்பதை உறுதி செய்ய அதன் ஜி.பி.எஸ்., புகைப்படத்தை இணைக்க பதிவுத்துறை சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது.


அட்சரேகை - தீர்க்க ரேகை


GPS புகைப்படத்தில் , சொத்தின் தற்போதைய நிலை தெரிய வருவதுடன், அதன் அட்சரேகை , தீர்க்க ரேகை அடிப்படையில் , அந்த இடத்தின் விபரங்கள் இடம் பெறும். அத்துடன் அந்த இடம் அமைந்துள்ள நகர் மற்றும் தெரு பெயரும் , புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். வழக்கமான கேமராக்களில் , இத்தகைய புகைப்படத்தை எடுக்க முடியாது என்பதால் , இதற்கென பல மொபைல் போன் செயலிகள் உள்ளன.


GPS புகைப்படம் - கூடுதல் பாதுகாப்பு


தனியார் நிறுவனங்களின் இந்தச் செயலியை செய்து , பதிவிறக்கம் அதன் வாயிலாக சொத்தின் GPS புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் , பத்திரப் பதிவின் போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். உண்மையில் சொத்து குறித்த விபரங்கள், பத்திரத்தில் இடம் பெறுவது , அதை வாங்கும் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தப் புகைப்படம் எடுப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து ஆவண எழுத்தர்கள் கூறும் போது ; 


பத்திரத்தில் இணைப்பதற்காக ஜி.பி.எஸ்., புகைப்படம் எடுப்பது தொடர்பாக , மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பத்திரம் தயார் செய்வோர் தான் , இதற்கு உதவ வேண்டியுள்ளது. குறிப்பாக , இத்தகைய புகைப்படங்கள் எடுக்க , அரசு தரப்பில் எந்த செயலியும் இல்லை.


தனிப்பட்ட விபரங்கள் - வெளியே செல்லும் நிலை


தனியார் நிறுவனங்களின் செயலியை பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக மக்கள் இதை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் தனிப்பட்ட விபரங்கள் , வெளியாட்களுக்கு செல்லும் நிலை உள்ளது. அத்துடன் தேவையில்லாத பல்வேறு தகவல்கள் , அவர்களின் மொபைல் போனில் தானாக பதிவிறக்கமாகிறது.


எனவே இந்த விஷயத்தில் நம்பகமான பாதுகாப்பான முறையில் எந்தச் செயலியை பயன்படுத்த வேண்டும் என , பதிவுத்துறை உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் அல்லது பிரத்யேக செயலியை உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறினர். 


இதுகுறித்து பதிவுத் துறை தரப்பில் கூறுகையில் , பத்திரங்களில் GPS புகைப்படம் இணைக்க , பாதுகாப்பான செயலியை பரிந்துரைக்க முடியுமா அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.