தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுகவினர் பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.



இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், 2,981 இடங்கள் போட்டியின்றி நிரப்பப்பட்டுள்ளதால், மீதமுள்ள 23,998 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில், 39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 78 மாவட்ட கவுன்சிலர்கள், 755 ஒன்றிய கவுன்சிலர்கள், 1,577 கிராம ஊராட்சித்தலைவர்கள், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

காஞ்சிபுரம்

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 1,744 வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பாதுகாப்பு பணியில் 4,250 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து  15ல் இருந்து 22 வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கூர்ந்தாய்வு முடிந்து 25ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒரு வாரத்திற்கும் மேலாக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். 



காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில், 680 ஓட்டுச்சாடிகளில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதற்றமான 255 ஓட்டுச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 1.05 லட்சம் வாக்காளர்கள், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 1.05 லட்சம் வாக்காளர்கள், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 1.04 லட்சம் வாக்காளர்கள், இன்று வாக்களிக்க உள்ளனர்.

 

 செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனிததோமையார்மலை ஆகிய ஒன்றியங்களுக்கு, இன்று தேர்தல் நடக்கிறது. இங்குள்ள 1,064 ஓட்டுச்சாவடிகளுக்கு, 6,384 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.  இவர்களுக்காக 680 ஓட்டுச்சாவடிகளில், 5,053 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 72 பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தை 89 மண்டலங்களாக பிரித்து, மண்டல அலுவலர்கள் மூலம், வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் 91 வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.



காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஏழு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 ஆய்வாளர்களும், 2,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதை தவிர 53 மொபைல்   காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் இருப்பர். 30 க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தலன்று சோதனைச்சாவடிகள் செயல்பட உள்ளன. கூடுதல் தேவைக்காக 35 பேர் கொண்ட அதிரடிப் படையினரும் தயாராக உள்ளனர் .



செங்கல்பட்டு  மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் மாவட்ட காவல்துறையினர் 1,000 பேரும், வெளிமாவட்ட காவல்துறையினர் 1,250 பேரும் என 2,250 போலீசார், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் பகுதியில், வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது உள்ளிட்ட வேலைகளுக்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.