‘மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள மனித ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது.


தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவுவது உள்ளிட்டவை இந்த மையத்தின் செயல்பாடுகளில் அடங்கும்.


ஐஐடி மெட்ராஸின் சூப்பர் முயற்சி:


செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு என்பது கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் முக்கிய விஷயமாகும். கட்டுப்பாடுகளுக்கும் புதுமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்று.


இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.


உச்சநீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம் (சன்சத் டிவி வழியாக), இந்திய ராணுவம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டப் பணிகளில் இந்த மையம் பணியாற்றி வருகிறது.


மையத்தின் நோக்கங்கள் என்ன?


தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் AVSM, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் எம்.ஜே.சங்கர் ராமன், CHAI தலைமை விஞ்ஞானி பேராசிரியர் கவுரவ் ரெய்னா மற்றும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இதர தொடர்புடையோர் முன்னிலையில் இந்த மையம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.


இந்த மையத்தின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “மனித மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் இறுதிப் பயனர்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உள்ளதாகவே தெரிகிறது.


செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஈடுபடுத்துவதன் பல்வேறு அம்சங்களை, குறிப்பாக விளக்கத்திறன், பொறுப்புக் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கவனிக்கும் விதத்தில் CHAI-ன் பணிகள் அமைந்திருக்கும்” எனக் குறிப்பிட்டார்.


இந்த மையத்தின் நோக்கம் மூன்று பரிமாணங்களை மையமாகக் கொண்டிருக்கும். மனித ஆற்றலை மேம்படுத்துதல், மக்களைப் பாதுகாத்தல், கலாச்சாரம்- பாரம்பரியத்தின் மூலம் பொதிந்துள்ள சமூக மதிப்பைப் பெருக்குதல்.


நாடு முழுவதும் உள்ள மாணாக்கர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் மற்றும் தீர்வுகளில் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையம் வாய்ப்பாக அமையும். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள மாணவ-மாணவிகள் தங்களின் இளங்கலை, முதுகலை, பிஎச்டி ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் போன்றவைகளை இம்மையத்தின் வழிகாட்டுதலுடன் தொடரலாம். செயற்கை நுண்ணறிவில் திறமை படைத்தவர்களுக்கு தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.