புராதனமான கோவில்களை மெல்ல அழிக்க அனுமதித்தால் அவற்றை நிர்வகிக்கும் கேள்வி எழாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவில்களையும், அவற்றின் தொன்மையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.


திருவண்ணாமலை கிரிவல பாதையில் பாலி தீர்த்தம் அருகில் அமைந்திருந்த பக்த மார்க்கண்டேயர் கோவிலை இடித்து காபி கடை அமைத்துள்ளதாகக் கூறி, தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சிவபாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆக்கிரமிப்பை அகற்றி, இடிக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலத்தில் காபி கடை அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டிருந்தது.


அதன்படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், கோவில் இருந்ததையும், இடிக்கப்பட்டதையும் உறுதி செய்த போதும், அக்கோவில் இடம் பெற்றிருந்த சர்வே எண்ணை கண்டறிய முடியவில்லை என அறிக்கை அளித்திருந்தார்.  அதேசமயம், காபி கடை உரிமையாளர்கள், தங்கள் கடையின் முன்புறம் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனத் தெரிவித்திருந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வு, கோவில்களை பாதுகாக்க வேண்டிய கடமை அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உள்ளதாகவும், புராதன கோவில்களை அழிக்க அனுமதித்தால், அவற்றை நிர்வகிக்கும் கேள்வி எழாது எனத் தெரிவித்தனர். மேலும், அறநிலையத் துறை ஆணையர் விரிவான விசாரணையை நடத்தி கோவிலின் உண்மையான இருப்பிடத்தை மூன்று மாதங்களில் கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டது.


மேலும், கோவிலின் உண்மையான இருப்பிடத்தை கண்டறிந்த பின், ஆறு மாதங்களில் கோவிலை மீண்டும் கட்ட வேண்டும் எனவும், கோவில் நிலத்தை காபி கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்த அனைத்து நடைமுறைகளையும் ஒன்பது மாதங்களுக்குள் முடித்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண