அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், 69 தங்கப் பதக்கம் உட்பட 3.66 லட்சம் மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.


ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பிறகு 1978ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனத்துடன், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. 


அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.


பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.


கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. எனினும் நீண்ட காலமாக அண்ணா பல்கலைகத்தின்  42-வது பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது


இந்நிலையில் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். 




உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நினைவுப் பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து வரவேற்பு உரையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார். 


அதைப் போலவே துணை வேந்தர் வேல்ராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகியோரும் தங்களின் உரைகளை நிகழ்த்தினர். அதைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி இந்தப் பதக்கங்களை வழங்கினார். நிறைவாகப் பிரதமர் மோடி, பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார். 


இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அண்ணா பல்கலை வளாகக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் படிக்கும் 3.66 லட்சம் மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்பை முடித்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண