Chennai Rains: தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் பிறந்தது முதலே சென்னையில் வழக்கத்தை விட குளிர் வாட்டி வதைத்து வந்தது. மார்கழி மாதத்தின் பிற்பாதியான ஜனவரி தொடக்கத்தில் குளிர் மிக கடுமையாக வாட்டியதால் மக்கள் அவதியுற்றனர். 

சென்னையில் திடீர் மழை:

பொங்கலுக்கு பிறகு வழக்கம்போல வெயில் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று மாலை முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அண்ணாசாலை, ராயப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், பாரிமுனை, ராயபுரம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கடுமையாக பெய்து வருகிறது. நேற்று மாலை லேசான தூரலாக இருந்து வந்த நிலையில், இன்று மழை அதிகளவு பெய்து வருகிறது.

மக்கள் அவதி:

இதனால், ஞாயிற்றுக்கிழமை நாட்களில் குடும்பத்துடன் வெளியில் சுற்றிப்பார்க்கச் சென்றவர்கள், தி.நகர் போன்ற இடங்களுக்கு பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனால், சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகியது. 

தண்ணீர்:

மெட்ரோ பணிகள் நடந்து வரும் தேனாம்பேட்டை, வடபழனி போன்ற பல பகுதிகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றனர். ஆங்காங்கே சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

10 மணி வரை:

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர் , திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று கூறியுள்ளது. மேலும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

மழை காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் அதை உடனடியாக அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசல் ஈடுபடாமல் இருப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

குடியரசு தின கொண்டாட்டம்:

நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ள நிலையில், விழா நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை காரணமாக சென்னையில் இருந்து வெளியூர் பேருந்துகள் செல்லும் பாதையிலும், வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் வரும் பாதையிலும் சற்று நெரிசல் காணப்படுகிறது.