சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயில் நிலையமாக உள்ள கிண்டி ரயில் நிலையம் , மறுசீரமைக்கப்பட்ட பயன்பாட்டிற்கு வர உள்ளது. 


அம்ரித் பாரத் - Amrit Bharat


இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை கொடுக்கும் வகையில், "அம்ரித் பாரத் " என்ற ரயில் நிலையின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி ,சேலம், மதுரை உள்ளிட்ட 6  கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடையாளம் காணப்பட்டு படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.‌




இதன் ஒரு பகுதியாக சென்னை கோட்டம் பகுதியில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள ரயில் நிலையங்களில் மேம்பாடு பணி நடைபெறுகிறது.‌ அந்த வகையில் சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, செயின்ட் தாமஸ் மவுண்ட், கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் மறு சீரமைக்கும் பணி நடைபெறும் என தெற்கு இந்திய ரயில்வே அறிவித்திருந்தது. 


கிண்டி ரயில் நிலையம் - guindy Railway Station Redevelopment 


சென்னையில் அமைந்துள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கிண்டி ரயில் நிலையம் உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கிண்டி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் ரயில் நிலையங்களில், ஒன்றாக கிண்டி ரயில் நிலையம் இருந்து வருகிறது.‌ இதனால் கிண்டி ரயில் நிலையத்தில் மேம்பாடு செய்வதற்காக, சுமார் 13.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்ற வருகிறது. 





என்னென்ன சிறப்பம்சங்கள் அமைய உள்ளது ?


மக்களை கவரும் வகையிலும், ரயில்வே நிலையத்தில் நுழைவாயில்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் இந்திய ரயில் நிலையத்தில் புதிய பயண சீட்டு வழங்கும் இடம் அமைக்கப்பட உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்வதற்கான, ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அனைத்து நடைமேடைகளும் மறுசீரமைக்கப்பட உள்ளன. நடைமேடைகள் மற்றும் பிற இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பழைய மேற்கூரைகள், அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளன. 


 




 


பிரதான நுழைவாயில் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மேம்பாடு செய்யப்பட உள்ளன. மேலும் மூன்று லிப்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பயன்படும் வகையில் டிஜிட்டல் முறையில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளன. அதேபோன்று அதிநவீன சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட உள்ளன. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு கிண்டி ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது, பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


திட்டத்தின் முக்கிய அம்சம் என்ன ?


நாள்தோறும் ரயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கேற்றார் போல் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று புதிய தொழில்நுட்பங்களும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், ரயில் நிலையங்கள் மேம்பாடு என்பது இன்றியமையாத பணியாக மாறி உள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்