ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 (ஏ) எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பானது, டிசம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை மற்றும் பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆகிய பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வு ,  15 மாவட்டங்களில் உள்ள 331 மையங்களில் இன்று நடைபெறுகிறது.

 



 

அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், குரூப் 3 ஏ தேர்வானது, இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏனாத்தூர் பகுதியில் தேர்வு எழுத வந்த 50-க்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள், சில நிமிடங்கள் தாமதமானதால், கதவு அடைக்கப்பட்டு தேர்வாளர்களேக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



 

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காஞ்சிபுரம் - ஏனாத்தூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் பூட்டப்பட்டதால் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அதேபோல் வரும் வழியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தாமதம் ஏற்பட்டதால், தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் வழியில் ஏற்பட்ட விபத்தை பார்த்த தேர்வாளர்கள் சிலர் அவர்களுக்கு உதவியும் செய்து விட்டு வந்துள்ளனர்.



 

5 நிமிடத்திற்கும் குறைவான நேரமே தாமதமாக வந்தோம், எனவே மனிதாபிமான அடிப்படையில், உள்ளே அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு  வந்தவர்களிடம், காவல்துறையினர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக கூறினர். இதனை அடுத்து தேர்வு எழுத வந்தவர்கள், தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர். இதனால் தேர்வு நடைபெற்ற வளாகத்திற்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது.