மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை, தற்போது உலகின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உள்ள கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அவரது வளர்ச்சியை பாராட்டும் வகையில், இந்திய-அமெரிக்கரான சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருது வழங்கப்படும் என கடந்த குடியரசு தினத்தின் போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.




 

சுந்தர் பிச்சைக்கு பதம்பூஷன் விருது:

 

இந்நிலையில், சுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் எனும்  விருதை, அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சத்து சான் பிரான்சிஸ்கோவில் வழங்கி கவுரவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட இந்திய தூதர், மதுரையிலிருந்து மவுண்டன் வியூ வரையிலான சுந்தரின் உத்வேகப் பயணம், இந்தியா - அமெரிக்கா பொருளாதாரம்  மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்தி, உலகளவிய கண்டுபிடிப்புகளில் இந்திய திறமையாளர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

 

நம்ப முடியவில்லை - சுந்தர் பிச்சை:

 

பத்மபூஷன் விருதை பெற்றது தொடர்பாக பேசிய சுந்தர் பிச்சை, விருதை தன்னிடம் வழங்கிய இந்திய தூதர் மற்றும் ஜெனரல் பிரசாத் ஆகியோருக்கு நன்றி. இந்த மகத்தான கவுரத்திற்காக இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை உருவாக்கிய நாட்டால் இந்த வகையில் கவுரவிக்கப்படுவது நம்ப முடியாத விஷயமாக உள்ளது. என்னுள் ஒரு பகுதியான இந்தியாவை,  நான் எங்கு சென்றாலும் என்னுடனே எடுத்துச் செல்கிறேன். இதை அழகான விருதைப் போலல்லாமல், நான் எங்காவது பாதுகாப்பாக வைத்திருப்பேன்.

 



 

மோடியை பாராட்டிய சுந்தர்:

 

கற்றல் மற்றும் அறிவைப் போற்றும் குடும்பத்தில் வளரும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என் பெற்றோர் எனது ஆர்வங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நிறைய தியாகம் செய்தனர். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா எனும் தொலைநோக்குப்பார்வை பாராட்டுக்குரியது, இந்த திட்டம் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்திய அரசு, வணிகங்கள் மற்றும் சமூகங்களுடன் சேர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக அங்கு முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

 

இந்தியாவில் கூகுள் முதலீடு:

 

இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்காக 75 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதாக அண்மையில் அறிவித்தோம். அதன் மூலம், மலிவு விலையில் இணைய வசதி, டிஜிட்டல் வணிகம் மற்றும் இந்தியாவிற்கான தனிப்பட்ட தேவைகளுக்கான பல வசதிகளை ஏற்படுத்த உள்ளதாகவும், கூகுள் பிச்சை தெரிவித்தார். இதனை அடுத்து அவர்  இந்தியாவில் சில நாட்கள் தங்கி இருக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தனஶ்ரீ 



 

மாமல்லபுரத்திற்கு வருகை தந்த சுந்தர் பிச்சை

 

சுந்தர் பிச்சை நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்து உலக புகழ்பெற்ற சுற்றுலாதளமான மாமல்லபுரத்தை தன் குடும்பத்துடன் சுற்றிப் பார்த்தார். சுந்தர் பிச்சை தன்னை யாரும் அடையாளம் காணாத வகையில் தலையில் தொப்பியும், முகத்தை மறைக்கும் வகையிலான மாஸ்க்கும் அணிந்திருந்தது குறிப்பிடத் தக்கது. மகாபலிபுரம் கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுன தபசு உள்ளிட்ட இடங்களை அவர் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி உதவியுடன் கண்டுகளித்தார். மகாபலிபுரத்தில் பல்லவர் கால கோவில் மற்றும் சிற்பங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்த சுந்தர் பிச்சையின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.