நவராத்திரி விழா:

 

நவராத்திரி விழா, செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரையிலான ஒன்பது நாட்கள் இவ்வருடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் தெய்வத்தின் பெண் தன்மையை கொண்டாடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்கள், உமா தேவியின் மூன்று குணங்களாக வகைப்படுத்தப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் தேவி உக்கிரமாக இருப்பார், அதாவது துர்கா காளி வடிவங்கள் போன்று காணப்படுவார். அடுத்த மூன்று நாட்கள் சாந்தமாக தேவி இருப்பார், அதாவது செல்வ வளத்திற்கு ஏற்றவராக லஷ்மி வடிவில் இருப்பார். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வடிவில் இருப்பார், அதாவது ஞான வடிவில் இருப்பார்.

 



 

நவராத்திரி விழா என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கொலு பொம்மைகள் தான், பாரம்பரியமாக கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரியை கொண்டாடுபவர்கள் கொலு பொம்மைகளை வாங்கிட வருகை தருவது காஞ்சிபுரத்திற்கு தான். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில்  பகுதிக்கு அருகிலேயே அஸ்தகரி தெரு என்று அழைக்கப்படும் பொம்மை கார தெரு உள்ளது.



 

 

பொம்மை கார தெரு 

 

இங்கு தெரு முழுவதும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வீடுகள் தோறும் பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபட்டு காகித கூழ் பொம்மைகள், களிமண் பொம்மைகள் தயாரித்து பல்வேறு விதவிதமான வண்ணங்களை தீட்டி  தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம், கட்டுப்பாடுகள் காரணமாக பொம்மை உற்பத்தி விற்பனை தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கும் பொம்மை தொழிலாளர்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்பொழுது கொரோனா அச்சம் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்ந்து இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் திருவிழாக்களும் நடைபெற துவங்கி உள்ளது.

 



 

கலர் கலர் பொம்மைகள்

 

இன்னும் சில வாரங்களில் தொடங்கும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழாவிற்காக விறுவிறுப்பாக கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பொம்மைகள் தயாரிப்பு வரிசையில் கைலாய செட், திருப்பாற்கடல் செட், தசாவதார செட் சப்தரிஷி செட், பெருமாள் பிரம்மோற்சவ செட் திருமண வைபவம் செட், சீமந்தம் காது குத்தல் செட் காய்கறி விற்பனை செட்,  ராமாயண மகாபாரத காட்சிகள், பல்வேறு விதமான சுவாமி சிலைகள் உள்ளிட்டவை புத்தம் புதிய வடிவத்தில் தயாரித்து கண்களை கவரும் வகையில் வண்ணங்களை தீட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

 



 

அதிகரித்த விற்பனை

 

விதவிதமான கொலு பொம்மைகளை வாங்கிச் செல்ல உள்ளூர் மட்டுமல்லாது, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் இருந்தும் வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பொம்மைக்கார தெருவிற்கு வருகை தந்து, வீடு வீடாகச் சென்று கொலு பொம்மைகளை பார்வையிட்டு, தேர்வு செய்து தங்களுக்கு தேவையான பொம்மைகளை மற்ற இடங்களைக் காட்டிலும் விலை குறைவாய் கிடைப்பதால் வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



 

நேரில் வந்து வாங்க முடியாதவர்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் ஆர்டர் பெற்றுக் கொண்டு பார்சல் செய்து அனுப்பி வருகின்றனர். மேலும் ஒரு சிறப்பாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் பொம்மைகளை பார்சல் செய்து விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நவராத்திரி கொலு பொம்மை விற்பனை காஞ்சிபுரம் பொம்மைக்கார தெரு பகுதியில் சூடு பிடித்து வருவதால் தொழிலாளர்களும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.